ஓட்டுப் போட சிறையில் காத்திருக்கும் 6 எம்.பிக்கள்
டெல்லி: லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதாதளம், முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடி, மாயாவதியின் பகுஜன்சமாஜ் கட்சிகளைச் சேர்ந்த, கொலை, கொலை, கொள்ளை வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்டு சிறைவாசம் அனுபவித்து வரும் 6 எம்.பிக்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொண்டு வாக்களிக்க ஆயத்தமாகி வருகின்றனர்.
150 வழக்கு புகழ் அதீக் அகமது:
மேற்கண்ட 6 எம்.பிக்களும் பயங்கரமான குற்றப் பின்னணிகளைக் கொண்டவர்கள். இவர்களில் சமாஜ்வாடிக் கட்சியைச் சேர்ந்த அதீக் அகமதுதான் மிக பயங்கரமானவர். இவர் மீது 150க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் உள்ளன. உ.பி. மாநிலம் பூல்பூர் என்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.
தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் சமாஜ்வாடி கட்சியின் கொள்கைளுக்கு முரண்பாடாக நடந்து கொண்டதா கூறி கட்சியை விட்டு நீக்கி விட்டனர்.
பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ ராஜு பால் என்பவரைக் கொன்ற வழக்கில் கைதாகி தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இவர் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
'கட்டப் பஞ்சாயத்து' சஹாபுதீன்:
இவர் லாலுவின் ராஷ்டிரிய ஜனதாதள எம்.பி. இவர் மீது 30க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. எல்லாமே கொலை, கொலை முயற்சி, கட்டப் பஞ்சாயத்து, அடிதடி, பணம் பறிப்பு என பக்கா கிரிமினல் வழக்குகள்தான்.
மிகப் பெரிய கிரிமனல் வழக்குகளை தன்னகத்தேக் கொண்டுள்ள இந்த 'மக்கள் பிரதிநிதி' சிவான் தொகுதி எம்.பி.
ஒருவரை கொலை செய்ய கடத்திய வழக்கில் கைதாகி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டார்.
'லைஃப்' பப்பு யாதவ்:
இன்னொருவர் லாலு கட்சியைச் சேர்ந்த பப்பு யாதவ். இவரும் மெகா குற்றப் பின்னணியைக் கொண்டவர்தான். பீகார் மாநிலம் மாதேபூர் தொகுதியில் எம்.பி. ஆனவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் அஜீத் சர்க்கார் என்பவரைக் கொன்ற வழக்கில் இவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது திகார் சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.
ராஷ்டிரிய ஜனதாதளத்தைச் சேர்ந்த பப்பு யாதவ் அரசுக்கு ஆதரவாக வாக்களிப்பார்.
பாலியா சூரஜ்பான் சிங்:
சூரஜ்பான் சிங் உபி.மாநிலம் பாலியா தொகுதியின் எம்.பி. இவர் ராம் விலாஸ் பாஸ்வானின் லோக் ஜன சக்தி கட்சியைச் சேர்ந்தவர். இவர் மீது ஏகப்பட்ட கிரிமினல் வழக்குகள் உள்ளன. இருப்பினும் ஒரு வழக்கில்தான் இவருக்கு தண்டனையே கிடைத்துள்ளது. இதையடுத்து சிறையில் அடைக்கப்பட்டு தண்டனையை அனுபவித்து வருகிறார்.
'ஆக்கிரமிப்பு' உமாகாந்த் யாதவ்:
உமாகாந்த் யாதவ் பகுஜன் சமாஜ் கட்சியைச்சேர்ந்தவர். மச்சிலிசாகர் தொகுதி எம்.பி. இவர் மீது ஏகப்பட்ட நில ஆக்கிரமிப்பு வழக்குகள், சட்டவிரோதமாக கட்டடத்தை இடித்தது உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.
கடந்த 2007ம் ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவரது ஓட்டு அரசுக்கு எதிராக இருக்கும்.
அப்சல் அன்சாரி:
இவர் சமாஜ்வாடிக் கட்சியைச் சேர்ந்த எம்.பி. இவர் பாஜக தலைவர் கிருஷ்ணானந்த் ராய் என்பவரைக் கொன்ற வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
இந்த ஆறு பேரையும் வாக்களிக்க அழைத்து வர காங்கிரஸ் தரப்பில் முயற்சிகள் தொடங்கியுள்ளன. இந்த ஆறு பேரில் அதீக் அகமது யாருக்கு ஓட்டுப் போடுவார் என்பது உறுதியாக இல்லை. ஒரு ஓட்டு மாயாவதி கட்சிக்குரியது. மற்ற நான்கும் அரசுக்கு ஆதரவானது என்பது குறிப்பிடத்தக்கது.
நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொண்டு வாக்களிக்க ஆறு எம்.பிக்களுமே ஆவலாக இருப்பதாக கூறப்படுகிறது.
--












Click it and Unblock the Notifications