நம்பிக்கை வாக்கெடுப்பு: திமுகவுக்கு 'செக்' வைக்க பாமக முடிவு!
சென்னை: நம்பிக்கை வாக்கெடுப்பில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு ஆதரவு தர வேண்டுமானால், திமுகவுக்கு நெருக்கடி கொடுத்து காடுவெட்டி குருவை விடுவிக்க வேண்டும் என்று காங்கிரஸை நெருக்க பாமக முடிவு செய்துள்ளதாக பேச்சு அடிபடுகிறது.
தமிழகத்தில் திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணியிலிருந்து பாமகவை திமுக வெளியேற்றி விட்டது. இருப்பினும் மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் தொடர்ந்து பாமக நீடிக்கிறது.
பாமகவை நீக்கியதோடு மட்டுமல்லாமல், அக்கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், வன்னியர் சங்கத் தலைவருமான காடுவெட்டி குருவை 3 வழக்குகளில் முதலில் கைது செய்த தமிழக அரசு பின்னர் தேசிய பாதுகாப்பு சட்டத்தையும் அவர் மீது பிரயோகித்துள்ளது. இதனால் ஒரு வருடத்திற்கு விசாரணையே இல்லாமல் காடுவெட்டி குருசிறையில் அடைபட நேரிட்டுள்ளது.
இதனால் பாமக கடும் கொதிப்புடன் உள்ளது. இந்த நிலையில்தான் திமுகவுக்கு செக் வைக்க பாமகவுக்கு சரியான வாய்ப்பாக நம்பிக்கை வாக்கெடுப்பு வந்துள்ளது.
அரசுக்கு ஆதரவான வாக்குகளை உறுதி செய்வதில் காங்கிரஸுக்கு இன்னும் முழுமையான நிம்மதி வரவில்லை. காரணம், ஆதரவு தருவதாக அறிவித்துள்ள கட்சிகளின் எம்.பிக்களுக்கிடையே நிலவும் குழப்பம்தான். இதன் காரணமாக இருக்கிற எம்.பிக்களையும், கிடைக்கிற எம்.பிக்களையும் எப்பாடுபட்டாவது தக்க வைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது காங்கிரஸ்.
ஒரு உறுப்பினரால் கூட தலைவிதி மாறிப் போக வாய்ப்பிருக்கிறது என்பதால் எந்த கட்சியையும், எந்த எம்.பியையும் பகைத்துக் கொள்ள காங்கிரஸ் விரும்பவில்லை.
இந்த சூழ்நிலையைத்தான் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள பாமக விரும்புவதாக பேச்சு எழுந்துள்ளது. பாமகவிடம் 6 எம்.பிக்கள் உள்ளனர். இப்போதைய நிலையில், இது காங்கிரஸ் கட்சிக்கு மிகப் பெரிய பலமாகும்.
இதைப் பயன்படுத்தி காடுவெட்டி குரு மீதான வழக்கை கைவிட வேண்டும், பாமகவினர் மீதான வழக்குகளை கைவிட வேண்டும், மீண்டும் திமுக கூட்டணியில் பாமகவை சேர்க்க வேண்டும் என காங்கிரஸை பாமக தரப்பில் வலியுறுத்தப் போவதாக கூறப்படுகிறது.
இதற்கு காங்கிரஸ் ஒத்துக் கொள்ளாவிட்டாலோ அல்லது திமுக தயக்கம் காட்டினாலோ அணி மாற பாமக தீர்மானித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் காங்கிரஸ் வட்டாரத்தில் கலக்கம் ஏற்பட்டுள்ளது.
பாமக மாற்றி ஓட்டுப் போட முடிவு செய்தால் அது நிச்சயம் அரசுக்கு ஆபத்தாக முடியும் என்பதால், இதை சமாளிக்க காங்கிரஸ் தரப்பு யோசித்து வருவதாக தெரிகிறது.
இதற்கிடையே, பாஜக அணியில் பாமகவை இழுக்க டெல்லி வட்டாரத்தில் சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாம். இந்த முயற்சியில் அதிமுகவின் பங்கும் இருப்பதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications