நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணிக்க தயாநிதி மாறன் முடிவு?

வருகிற 21ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங், லோக்சபாவில் நம்பிக்கை தீர்மானத்தைக் கொண்டு வருகிறார். 22ம் தேதி இதன் மீதான வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.
இந்த வாக்கெடுப்பில் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு வாக்களிக்க வேண்டும் என ஒவ்வொரு கட்சியும் தங்களது கொறடாக்கள் மூலம் உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றன.
திமுகவும், தனது கட்சி எம்.பிக்கள் தவறாமல் ஓட்டளிக்க வேண்டும் என கொறடா உத்தரவினைப் பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக திமுக கொறடா கிருஷ்ணசாமி அனைத்து எம்.பிக்களுக்கும் உத்தரவினை அனுப்பியுள்ளார்.
ஆனால் இந்த உத்தரவுக்கு மாறாக, ஓட்டெடுப்பில் கலந்து கொள்ளாமல் நடுநிலை வகிக்கப் போவதாக தயாநிதி மாறன் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் வெளிப்படையாக கருத்து தெரிவிக்கவில்லை.ஆனால் அவர் ஓட்டளிக்கமாட்டார் என அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அப்படி அவர் ஓட்டளிக்காவிட்டால் அவரது எம்.பி பதவி பறிபோகும் வாய்ப்பு உருவாகும்.
இதுகுறித்து திமுக செய்தித்தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் கூறுகையில், கட்சி கொறடாவின் உத்தரவை யாரும் ஏற்காமல் மறுக்க முடியாது. அப்படி மீறி நடந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அனைவருக்கும் இது பொருந்தும் என்றார்.
திமுகவுடனான மோதலுக்குப் பின்னர் மத்திய அமைச்சர் பதவியிலிருந்து கழற்றி விடப்பட்டார் தயாநிதி மாறன். இருப்பினும், அவர் தொடர்ந்து எம்.பி. பதவியை வகிக்க திமுக அனுமதி அளித்துள்ளது. இதனால் தயாநிதி மாறன் தொடர்ந்து எம்.பியாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications