வாக்களிக்க நாடாளுமன்றம் வரும் 6 'சிறை' எம்பிக்கள்
டெல்லி: நாடாளுமன்றத்தில் வரும் 22ம் தேதி நடக்கவுள்ள நம்பிக்கை தீர்மானத்தின் மீது பல்வேறு சிறைகளில் உள்ள 6 எம்பிக்களும் வாக்களிக்கவுள்ளனர்.
லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளத்தைச் சேர்ந்த முகமது ஷகாபுதீன், பப்பு யாதவ், சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்த அதிக் அகமத், முகம்மத் அப்சல் அன்சாரி, பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த உமாகாந்த் யாதவ், ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சியைச் சேர்ந்த சூரஜ்மான் சிங் ஆகிய 6 எம்.பிக்களும் பல்வேறு கிரிமினல் வழக்குகளில் கைதாகி சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மத்திய அரசின் மீது கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கை தீர்மானத்தின் மீது வாக்களிக்க இவர்கள் நீதிமன்றத்திடம் அனுமதி பெற வேண்டும்.
இவர்களை வாக்களிக்க அழைத்து வர அவர்கள் சார்ந்த கட்சிகளோ அல்லது லோக்சபா செயலகமோ நடவடிக்கைகளில் இறங்க முடியாது. இதையடுத்து வாக்களிப்பதற்காக நாடாளுமன்றம் செல்ல அனுமதி கோரி இவர்கள் அந்ததந்த சிறைகளின் மூலமாக தனித்தனியே நீதிமன்றங்களை நாடியுள்ளனர்.
அனுமதி கிடைக்கும்பட்சத்தில் இவர்கள் சிறைகளில் இருந்து நாடாளுமன்றத்துக்கு அழைத்து வரப்படுவர். முதலில் டெல்லி திகார் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் நாடாளுமன்றத்துக்கு அழைத்து வரப்படுவார்கள்.
நாடாளுமன்றம் வந்தவுடன் பார்லிமென்டின் பாதுகாப்பு அதிகாரிகளிடம் இவர்கள் ஒப்படைக்கப்படுவர். வாக்களித்த பின்னர் அவர்களை அதிகாரிகள் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு மீண்டும் சிறைகளுக்கு கொண்டு செல்லப்படுவார்கள்.
கடந்த பாஜக ஆட்சியில் ஜனாதிபதி தேர்தலின்போது பொடா சட்டத்தில் கைதாகி சிறையில் இருந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இப்படித்தான் டெல்லி கொண்டு செல்லப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்பட்டார் என்பது நினைவுகூறத்தக்கது.