அம்பானி சகோதரர்கள் சண்டையால் ஆர்.காம் - எம்.டி.என். பேச்சு முறிந்தது!

அனில் அம்பானியின் ஆர்காம் நிறுவனம், தென் ஆப்பிரிக்காவின் எம்டிஎன் தொலைத் தொடர்பு நிறுவனத்தின் பங்குகளை வாங்குவது தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தது. ஆனால் இதை சீர் குலைக்கும் வகையில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் ஈடுபடுவதாக அனில் அம்பானி குற்றம் சாட்டினார்.
இந்த சண்டை பெரிய அளவில் வெடித்தது. அனிலுக்கு ஆதரவாக முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சி களம் இறங்கியது. முகேஷை தட்டி வைக்குமாறு அரசுக்குநெருக்கடி கொடுக்க ஆரம்பித்தது.
இதைத் தொடர்ந்து பிரதமர் மன்மோகன் சிங், முகேஷ் அம்பானியை வரவழைத்துப் பேசினார்.
பெரும் சர்ச்சைக்கு மத்தியில் ஊசலாடி வந்த ஆர்காம் - எம்டிஎன் பேச்சுவார்த்தை நேற்று இரவு முடிவுக்கு வந்தது. ஒப்பந்தம் ஏற்படாமல் முறிந்து போய் விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆர்காம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், சில முறைப்படுத்தப்படாத காரணங்களினால் இரு நிறுவனங்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை முடிவு பெறாமல் போய் விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்பானி சகோதரர்களிடையே நிலவி வரும் இந்த சண்டை காரணமாக ஆர்காம் நிறுவனத்தை விட்டு விட்டு பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் மீது தற்போது எம்டிஎன் நிறுவனம் தனது பார்வையைத் திருப்பியுள்ளது. இருப்பினும் இதுகுறித்து இரு நிறுவனங்களும் எந்தக் கருத்தையும் முறைப்படி வெளியிடவில்லை.












Click it and Unblock the Notifications