'குடி'-கண்டித்த தாயை அடித்துக் கொன்ற மகன்!
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே மது குடிப்பதை கண்டித்த தாயை அவரது மகனே அடித்துக் கொன்ற கொடூரம் நடைபெற்றுள்ளது.
திண்டுக்கல் நாயக்கர் புதுத்தெருவை சேர்ந்தவர் பாண்டி. கூலி தொழிலாளி. இவருக்கு அமுதா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
இவருக்கு குடிப் பழக்கம் இருந்தது. இதனால் மது குடிக்க அடிக்கடி தனது மனைவி அமுதா மற்றும் தாயார் கமலத்தம்மாவிடம் பணம் கேட்டு சண்டை போட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் அவரது பூர்வீக சொந்த வீடுகளை மது குடிக்க விற்று செலவு செய்தார். சம்பவத்தன்று தனது மனைவி அமுதாவிடம் மீண்டும் மது குடிக்க பணம் கேட்டுள்ளார். ஆனால் பணம் இல்லை என அமுதா கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த பாண்டி அமுதாவை கடுமையாக தாக்கினார். இதில் அவர் படுகாயம் அடைந்து திண்டுக்கல் அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார்.
இந்த தகவல் அறிந்த பாண்டியின் தாயார் கமலத்தம்மா மகனைக் கண்டித்துள்ளார். ஆத்திரம் அடைந்த பாண்டி சப்பாத்தி கட்டையால் தனது தாயார் கமலத்தாம்மாவை தாக்கினார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து கமலத்தம்மா பாடியை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
தலைமறைவான பாண்டியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.