அத்வானி ரொம்ப ஒழுங்கா?-ஆர்.ஜே.டி ஆவேசம்
டெல்லி: குற்றச்சாட்டு பதிவான எம்பிக்கள் அனைவரையும் மக்களவையில் வாக்களிக்க விடாமல் தடை செய்ய வேண்டும் என்றால் அதில் முதல் நபராக அத்வானியைத்தான் சேர்க்க வேண்டும் என ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதாதளம் கூறியுள்ளது.
மக்களவையில் அரசின் மீதான நம்பிக்கைத் தீர்மானத்தில் பங்கேற்றுப் பேசிய அக் கட்சியின் எம்.பி. தேவேந்தர் யாதவ் பேசுகையில்,
வழக்குகளில் கைதாகி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட எம்.பிக்களை நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ள விடாமல் தடை செய்ய வேண்டும் என்று அத்வானி கூறுகிறார். அவர் மட்டும் ஒழுங்கா? அவர் மீது எந்த குற்றப்பத்திரிக்கையும் பதிவு செய்யப்படவில்லையா?.
குற்றச்சாட்டு பதிவான அனைவரையும் தடை செய்ய வேண்டும் என்றால் அதில் முதல் நபராக அத்வானியைத்தான் சேர்க்க வேண்டும். அவர் மீது பல கிரிமினல் வழக்குககள் உள்ளன. எனவே அவரும் குற்றப் பின்னணி கொண்ட உறுப்பினர்களில் ஒருவர்தான்.
மதம் தொடர்பாக இரட்டை நிலையைக் கடைப்பிடிக்கிறது பாஜக. அமர்நாத் யாத்திரை தடைபட்டால் பெரும் குரல் எழுப்பும் பாஜக, அது ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் இந்துக்கள் புனிதமாக நினைக்கும் கோவர்த்தன் பர்வத் பகுதியைச் சுற்றிலும் குவாரி மாபியாக்களை வளர்த்து விட்டு வருகிறது.
இந்துக்களின் கடவுளான கிருஷ்ணர், தன்னுடைய விரலால் தூக்கியதாக கருதப்படும் கோவர்தன மலையை இடிக்கும் இந்த மாபியா கும்பலுக்கு ராஜஸ்தான் மாநில பாஜக அரசே துணையாக நிற்கிறது என்றார்.
இதற்கு பாஜக எம்.பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் கும்பலாக எழுந்து நின்று யாதவை பேச விடாமல் கோஷமிட்டனர். பதிலுக்கு ஆர்ஜேடி எம்பிக்களும் ஆவேசமாகக் கத்தினர்.
அப்போது எழுந்த ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் யாதவ், மகாபாரத யுத்தத்துக்கு நாங்கள் தயார். இங்கிருந்தே போரை தொடங்கலாம் என்றார்.
அவர் கூறுகையில், அமர்நாத் விவகாரத்தில் அதிக ஆர்வம் காட்டிவரும் பாஜக சட்ட விரோதமாக கனிம வளங்களை அள்ளுவதற்காக தான் ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் கிருஷ்ணரின் நிலத்தை அழிப்பது ஏன்? என்றார்.
இதையடுத்து பாஜக தரப்பு அமைதியானது.












Click it and Unblock the Notifications