பப்புவிடம் பாஜக ரூ. 7 கோடி பேரம்- லாலு
டெல்லி: மத்திய அரசுக்கு எதிராக ஓட்டு போடச் சொல்லி பாஜக மக்களவைத் துணைத் தலைவர் விஜய்குமார் மல்ஹோத்ரா என்னை திகார் சிறையில் வந்து சந்தித்தார் என லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தள எம்பி பப்பு யாதவ் கூறினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ. ஒருவரை கொலை செய்ததற்காக ஆயுள் தண்டனை பெற்று திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் பப்பு.
இந் நிலையில் மக்களவையில் நம்பிக்கைத் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் மல்ஹோத்ரா பேசுகையில், ஆட்சியைக் காப்பாற்றுவதற்காக தண்டனை பெற்று சிறையில் இருக்கும் எம்.பிக்களை கூட காங்கிரஸ் கூட்டணி விட்டு வைக்கவில்லை என்றார்.
அப்போது எழுந்த பப்பு, என்னை இதே மல்ஹோத்ரா சிறையில் வந்து சந்தித்து மத்திய அரசுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் என்றார்.
ஆனால், அதை மல்ஹோத்ரா மறுத்தார். நான் பப்பு யாதவை ஒரு போதும் சந்திக்கவில்லை என்றார்.
பின்னர் பப்பு மக்களவைக்கு வெளியே நிருபர்களிடம் பேசுகையில்,
பிகார் மாநிலம் மாதேபுரா தொகுதியில் இருந்து 5 முறை வெற்றி பெற்று இருக்கிறேன். என் தொகுதிக்கு வந்து என்னை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற முடியுமா என்று பாஜக, மார்க்சிஸ்ட் கட்சிக்கு சவால் விடுக்கிறேன். அடுத்தவர் மீது வசைபாடுவதை முதலில் அவர்கள் நிறுத்த வேண்டும் என்றார்.
ராஷ்ட்ரீரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ் கூறுகையில்,
எங்கள் கட்சி எம்.பி பப்பு யாதவுக்கு பாஜக பணம் கொடுக்க முன் வந்துள்ளது. திகார் சிறையில் அவரை சந்தித்து ரூ.7 கோடி தருவதாக பாஜக தலைவர் கூறியுள்ளார்.
இந்த விவரம் வெளியில் வந்தவுடன் அதை மறைக்க மக்களவையில் 1 கோடி ரூபாயைக் கொட்டி பாஜக நாடகம் நடத்தி தப்பிக்க முயல்கிறது என்றார்.












Click it and Unblock the Notifications