சென்னை புறநகர் கமிஷ்னராக ஜாங்கிட் பதவியேற்பு
தமிழக சட்டசபையில் கடந்த மே மாதம் சென்னை புறநகர் பகுதிக்கென தனி போலீஸ் கமிஷனர் அலுவலகம் ஏற்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து பரங்கிமலையில் சென்னை புறநகர் போலீஸ் கமிஷனர் அலுவலகம் இன்று திறக்கப்பட்டது. இதன் முதல் கமிஷனராக ஜாங்கிட் பொறுப்பேற்று கொண்டார்.
தமிழக டிஜிபி ஜெயின் இந்த அலுவலகத்தை திறந்து வைத்தார். வயர்லஸ் சேவையை சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சேகர் துவக்கி வைத்தார்.
பின்னர் டிஜிபி ஜெயின் நிருபர்களிடம் பேசுகையில்,
பொதுமக்களின் வசதிக்காகவும், போலீஸ் சேவையை மேம்படுத்தும் வகையிலும் சென்னை கமிஷனர் அலுவலகம் இரண்டாக பிரிக்கப்பட்டு, புறநகருக்கென தனி கமிஷனர் அலுவலகம் துவக்கப்பட்டுள்ளது.
பரங்கிமலை, அம்பத்தூர், எண்ணூர், மாதவரம் ஆகிய பகுதிகள் இந்த புறநகர் கமிஷனர் அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் வரும். புறநகர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தெரியாமல் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தாலும் இங்கு விசாரணைக்கு அனுப்பி வைக்கப்படும் என்றார்.
வடபழனி தொடர் கொலைகள் குறித்து நிருபர்கள் கேட்டபோது, கொலைகளை செய்வது சைக்கோ என்று குறிப்பிடுவது தவறு. கொலையாளியை நெருங்கி விட்டோம். விரைவில் பிடிபடுவான் என்றார்.
கமிஷனர் ஜாங்கிட் கூறுகையில்,
அம்பத்தூர், மாதவரம், பரங்கிமலை ஆகிய 3 காவல் மாவட்டங்களை உள்ளடக்கிய இதில் 39 காவல் நிலையங்கள் மற்றும் 8 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் செயல்படும்.
3 துணை கமிஷனர்கள், 13 உதவி கமிஷனர்கள் தற்போது உள்ளனர். விரைவில் மேலும் 2 துணைக் கமிஷனர்களும், 14 உதவிக் கமிஷனர்களும், 36 இன்ஸ்பெக்டர்களும் நியமிக்கப்படுவர்.
50 லட்சம் மக்கள் தொகை கொண்ட பகுதிகள் இந்த கமிஷனர் அலுவலகத்தின் கீழ் வருகின்றன. இனி பொதுமக்களின் குறைகள் உடனுக்குடன் நிவர்த்தி செய்யப்படும் என்றார்.
புதிய புறநகர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தின் கட்டுப்பாட்டு அறை எண் 23452447.