2 ஐக்கிய ஜனதா தள எம்பிக்கள் நீக்கம்
டெல்லி: மத்திய அரசுக்கு ஆதரவாக வாக்களித்த ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த 2 எம்பிக்கள் இன்று நீக்கப்பட்டனர்.
கடந்த 22ம் தேதி மத்திய அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது. இதில் எதிர்கட்சி எம்பிக்கள் பலர் கட்சி கொறடாவின் உத்தரவை மீறி அரசுக்கு ஆதரவாக ஓட்டு போட்டனர். இதையடுத்து பிரதான எதிர்கட்சியான பாஜக, தனது 8 எம்பிக்களை கட்சியிலிருந்து நீக்கியது. கட்சி மாறி ஒட்டுபோட்ட எம்பிக்களை 'கிளப்பும்' வேலையில் எதிர்கட்சிகள் ஈடுபட்டுள்ளன.
அந்த வரிசையில் தற்போது ஐக்கிய ஜனதா தளம் ஐக்கிய கட்சியிலும் 2 எம்பிக்கள் நீக்கப்பட்டுள்ளனர். பீகார் மாநிலம் நாலந்தாவைச் சேர்ந்த எம்பி ராம் ஸ்வரூப் பிரசாத் அரசுக்கு ஆதரவாக ஓட்டுபோட்டார். மற்றொருவரான லட்சத்தீவைச் சேர்ந்த எம்பி, பி.பி.கோயா வாக்களிக்காமல் இருந்துவிட்டார்.
இந்நிலையில் அக்கட்சியின் தலைவர் சரத்யாதவ் தலைமையில் தேசிய நிர்வாகிகளின் அவசர கூட்டம் நடந்தது. பின்னர் கட்சி பொதுச் செயலாளர் ஜாவீத் ரசா கூறுகையில், கட்சி கொறடாவின் உத்தரவை மீறி எம்பிக்கள் ராம் ஸ்வரூப் பிரசாத் மற்றும் பி.பி.கோயா ஆகியோர் அரசுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
இதனால் இருவரும் கட்சியில் இருந்து உடனடியாக நீக்கப்படுகின்றனர். சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்யும்படி சோம்நாத் சட்டர்ஜிக்கு மார்க்சிஸ்ட் கட்சி உத்தரவிட்டது. இதுகுறி்த்து வரும் 28ம் தேதி நடக்க உள்ள கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி முடிவு செய்யும் என்றார்.