விபச்சாரம்-பெண்களுடன் பிடிபடும் ஆண்களுக்கும் இனி தண்டனை!
டெல்லி: விபச்சார வழக்குகளில் சிக்கும் பெண்கள் மட்டும் தண்டனைக்குள்ளாகும் நிலையை மாற்றி, விபச்சாரப் பெண்களுடன் பிடிபடும் ஆண்களுக்கும் அபராதம், சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டத் திருத்தம் விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது.
விபச்சார வழக்குகளில் தற்போது பெண்களுக்கு மட்டுமே அபராதமும், சிறைத் தண்டனையும் விதிக்கப்படுகிறது. ஆண்களுக்கு இதில் எந்தவித தண்டனையும் கிடைக்காமல் இருந்தது.
இந்த நிலையை மாற்றி பெண்களைப் போல ஆண்களையும் தண்டிக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும் என மகளிர் அமைப்புகள் கோரி வந்தன. இதையடுத்து விபச்சாரத் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி, விபச்சார பெண்களிடம் போகும் ஆண்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது மூன்று மாத சிறை தண்டனை விதிக்கப்படும்; மறுமுறையும் அவர்கள் சிக்கினால், அவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதமும், ஆறு மாத சிறை தண்டனையும் விதிக்கப்படும்.
இதுதொடர்பான சட்ட மசோாத 2006ம் ஆண்டு, மத்திய பெண்கள், குழந்தைகள் நல அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது.
விபசாரத்தில் பெண்கள் மட்டுமின்றி, அவர்களிடம் வரும் ஆண் வாடிக்கையாளர்களுக்கும் தண்டனை உண்டு என்று அதில் கூறப்பட்டிருந்தது. இந்த மசோதா குறித்து, அமைச்சர்கள் குழு பரிசீலித்து பரிந்துரை செய்ய அனுப்பப்பட்டது. இதை பரிசீலித்த அமைச்சர்கள் குழு, சமீபத்தில் இதற்கு ஒப்புதல் தெரிவித்து பச்சைக்கொடி காட்டி விட்டது.
விரைவில் இந்த மசோதா, அமைச்சரவைக்கு அனுப்பப்பட்டு, அங்கும் அங்கீகாரம் பெறப்படும். அதன் பின், மீண்டும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு அமலாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.












Click it and Unblock the Notifications