நீதியின் அடிப்படையில் சேது திட்டத்தை நிறைவேற்றுவோம்- கருணாநிதி
டெல்லி: சேதுசமுத்திர திட்ட விஷயத்தில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவைப் பெற்று, நீதியின் அடிப்படையில் தீர்ப்பைப் பெற்று திட்டத்தை நிறைவேற்றுவோம் என முதல்வர் கருணாநிதி கூறினார்.
டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா ஆகியோரை முதல்வர் கருணாநிதி சந்தித்து நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றதற்கு வாழ்த்து தெரிவித்தார். இச் சந்திப்புகளுக்குப் பின் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
நான் எந்த கோரிக்கைகளுக்காகவும் இன்று வரவில்லை. சோனியா-பிரதமரை வாழ்த்த வந்தேன்.
பிரதமரிடம் முக்கியமாக தமிழக மீனவர்கள் கச்சத் தீவையொட்டிய பகுதிகளில் மீன்பிடிப்பதில் உள்ள பிரச்சினைகளைப் பற்றிப் பேசினேன். அவர் சார்க் மாநாட்டிற்கு கொழும்பு செல்லும்போது இதைப்பற்றி அங்கே அறிவுறுத்த வேண்டுமென்று கேட்டுக் கொண்டேன்.
வரும் 31ம் தேதி டெல்லியில் தமிழகத் தலைமைச் செயலாளர், தமிழக மீன்வளத்துறை செயலாளர், மீன் வளத்துறை இயக்குனர் ஆகியோர் இந்தப் பிரச்சினை பற்றி தமிழக அரசின் சார்பில் மத்திய அரசுக்கு விளக்கங்களைத் தெரிவிக்க வேண்டுமென்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. எம்.கே.நாராயணனிடம் அவர்கள் விளக்குவார்கள். அவர் அதனை பிரதமரிடம் கூறுவார்.
கச்சத் தீவை விட்டுக் கொடுத்ததால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை குறிப்பாக தமிழக மீனவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதகங்களைப் பற்றி பேசினோம்.
சேதுசமுத்திர திட்டம் பற்றி உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருக்கின்ற போது அங்கே வைக்கப்பட்ட வாதங்களைப் பற்றி விமர்சிப்பது வழக்குக்கு உகந்தது அல்ல. உச்சநீதிமன்றத்தின் உத்தரவைப் பெற்று, நீதியின் அடிப்படையில் தீர்ப்பைப் பெற்று அந்தத் திட்டத்தை நிறைவேற்றுவோம்.
1968ல் ஏற்பட்ட ஒப்பந்தம் ஒகேனக்கல் குடிநீர் திட்டம். இப்போது படிப்படியாக அது வளர்ச்சி பெற்றுக் கொண்டிருக்கின்றது. பல கட்டங்களாக பணிகள் நடைபெற்று வருகின்றன. எந்தெந்த பணிகள் என்றெல்லாம் காலப் பட்டியலையே நான் பல முறை வெளியிட்டிருக்கிறேன். அதிலே சில திட்டங்கள் தற்போது நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அந்த திட்டம் எப்போது முடியுமென்றே நான் ஏற்கனவே அறிவித்திருக்கிறேன்.
முல்லைப் பெரியாறு பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தைக்கு வந்ததும், இதே இடத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றதும் உங்களுக்கெல்லாம் தெரிந்தது தான். அந்த பேச்சுவார்த்தையில் நீங்களும் வேண்டாம், நாங்களும் வேண்டாம், உங்கள் மாநில பொறியாளர்களும் வேண்டாம், எங்கள் மாநில பொறியாளர்களும் வேண்டாம், பொதுவாக மத்திய அரசின் பொறியாளர்களைக் கொண்டு ஒரு குழு அமைத்து, அந்த குழுவின் பரிந்துரையின்படி நடப்போம் என்று நான் சொன்ன போது அதனை பரிசீலிப்பதாக கேரள முதல்வர் இங்கே தான் சொன்னார். அதற்கு பிறகு இப்போது மாறுதலாகப் பேசுகிறார்கள்.
நாடாளுமன்பத்தில் பணக் கட்டுகள் கொட்டப்பட்டுள்ளன. உண்மையில் லஞ்சம் தரப்பட்டிருந்தால் அது அது ஜனநாயக படுகொலை. அதே நேரத்தில் அது நாடகம் என்றால் அது கிரிமினல் விஷயம்.
பாமகவுடன் உறவு குறித்து மறுபரிசீலனைக்கே இடமில்லை.
தேசிய அளவி்ல் உருவாகியுள்ள மூன்றாவது அணி வேறு. இடதுசாரிகள்-திமுக உறவு என்பது வேறு என்றார்.
அணுசக்தி ஒப்பந்த பிரச்சனையில் உங்களது அரசியல் அனுபவத்தை மத்திய அரசு பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு பதிலளித்த கருணாநிதி,
வீட்டில் இருப்பவர்களே எனது அரசியல் அனுபவத்தை பயன்படுத்திக் கொள்ளவில்லையே.. என்றார்.












Click it and Unblock the Notifications