என்.எஸ்.ஜி. நாடுகளிடம் ஆதரவு திரட்டிய இந்தியா
டெல்லி: சிங்கப்பூரில் நடைபெறும் ஆசியான்- இந்தியா மாநாட்டின்போது அணு பொருள் சப்ளை நாடுகள் கூட்டமைப்பைச் சேர்ந்த நாடுகளிடம் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் ஆனந்த் சர்மா ஆதரவு திரட்டினார்.
இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தை செப்டம்பருக்குள் முடிக்க இந்தியாவும், அமெரிக்காவும் வேகமாக பணிகளை முடுக்கி விட்டுள்ளன. தற்போது என்.எஸ்.ஜி. எனப்படும் அணு பொருள்சப்ளை நாடுகளின் ஆதரவைப் பெறும் முயற்சியில் இந்தியா இறங்கியுள்ளது. அவர்களிடமிருந்து அணு வர்த்தகத்திற்கான விதி விலக்கு சலுகையை பெறவும் அது முயன்றுள்ளது.
இதற்கு நல்ல வாய்ப்பாக சிங்கப்பூரில் நடந்து வரும் ஆசியான் - இந்தியா அமைச்சர்கள் கூட்டம் மற்றும் 15வது ஆசியான் பிராந்திய மாநாடு தோதாக அமைந்துள்ளது.
இந்த மாநாட்டில் அமைச்சர் ஆனந்த் சர்மா கலந்து கொண்டுள்ளார். மாநாட்டிற்கு வந்திருந்த அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, ரஷ்யா, ஜப்பான், தென் கொரியாத, சீனா, பிலிப்பைன்ஸ், பிரான்ஸ், மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களோடு ஆலோசனை நடத்தினார்.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கான்டலீசா ரைஸுடன், ஒப்பந்தத்தை விரைவுபடுத்துவது தொடர்பாக விவாதித்தார் சர்மா. மற்ற நாடுகளின் அமைச்சர்களிடம் இந்தியாவுக்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
என்.எஸ்.ஜி. நாடுகளிடம் ஆதரவு திரட்டுவதற்காக பல குழுக்களை மத்திய அரசு அமைத்து பல நாடுகளுக்கும் அனுப்பியுள்ளது. சர்மா தலைமையிலான குழு சிங்கப்பூர் சென்றுள்ளது. அதேபோல கபில் சிபல், பிருத்விராஜ் செளகான், சிவசங்கர் மேனன் ஆகியோர் தலைமையிலும் தனித் தனி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேனன் தலைமையிலான குழகு ஜெர்மனி சென்றுள்ளது.
ஆகஸ்ட் 1ம் தேதி சர்வதேச அணு சக்தி ஏஜென்சியின் போர்டு உறுப்பினர்கள் கூடி, இந்தியாவின் பாதுகாப்பு அம்ச வரைவு ஒப்பந்தம் குறித்து பரிசீலித்து ஒப்புதல் அளிக்கவுள்ளனர்.
அதன் பின்னர் என்.எஸ்.ஜி. நாடுகளின் கூட்டமைப்பு ஒரு வாரத்திற்குள் ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் வழங்கும். இதையடுத்து அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு ஒப்பந்தம் செல்லும். அங்கு செப்டம்பருக்குள் ஒப்புதல் வழங்கப்படும். அதன் பின்னர் இந்திய -அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் அமலுக்கு வரும்.
--