நக்சல்கள்-சென்னையில் தென் மாநில டிஜிபிக்கள் மாநாடு
சென்னை: நக்சலைட்டுகளை ஒடுக்குவது தொடர்பான கூட்டு நடவடிக்கை குறித்து முடிவு செய்வது தொடர்பாக சென்னையில் இன்று தென் மாநில டிஜிபிக்கள் மாநாடு நடைபெற்றது.
தமிழகம், ஆந்திரா, கேரளா, புதுச்சேரி, கர்நாடக ஆகிய மாநிலங்களின் காவல்துறை தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றனர். தமிழகம் சார்பில் டிஜிபி ஜெயின், ஆந்திர டிஜிபி எஸ்.எஸ்.பி.யாதவ், புதுச்சேரி ஐஜி ஏ.எஸ்.கான், கேரள மாநில டிஜிபி ராமன் ஸ்ரீவத்சவா, கர்நாடக மாநில டிஜிபி ஆர்.ஸ்ரீகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தமிழக கூடுதல் டிஜிபிக்கள் அர்ச்சனா ராமசுந்தரம், விஜயகுமார், லத்திகா சரண், சென்னை போலீஸ் கமிஷனர் சேகர், புறநகர் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட், மேற்கு மண்டல ஐஜி சஞ்சய் அரோரா, வடக்கு மண்டல ஐஜி ராதாகிருஷ்ணன், ஆந்திர ஐஜி உமாபதி, கேரள ஐஜி லோக்நாத், கர்நாடக டிஐஜி கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட உயரதிகாரிகளும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.
எழும்பூரில் உள்ள போலீஸ் ஆபீசர்ஸ் மெஸ் வளாகத்தில் நடந்த இந்த மாநாட்டில், தென் மாநிலங்களில் தீவிரவாத செயல்களை கட்டுப்படுத்துவது குறித்தும், கடல் வழியாகவும் மாநிலங்களின் பிற பகுதிகள் மூலமாகவும் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுப்பது குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.
தீவிரவாதிகளின் நடமாட்டத்தை அடியோடு தடுக்கவும், அவர்களின் செயல்பாட்டை ஒடுக்கவும் மேற்கொள்ள வேண்டிய தீவிர நடவடிக்கைகள் குறித்து போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்கள்.
மேலும் மாநிலங்களுக்கு இடையே உணவுப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் கடத்தலை தடுக்கவும் நடவடிக்கைகள் மேற் கொள்வது பற்றியும் சைபர் கிரைம் குற்றங்களை ஒடுக்குவதில் மாநில காவல் துறைகளுக்கு இடையே ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
மேலும் குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள், அண்டை மாநிலங்களுக்கு தப்பி ஓடினால் அவர்களை கைது செய்து சட்ட நடவடிக்கைகளை முடுக்கி விட, அந்தந்த மாநில காவல் துறைகள் ஒத்துழைப்பை அளிப்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.












Click it and Unblock the Notifications