வன்னிய சமூக போலீஸார் இடமாற்றம்-தடை
அரியலூர்: அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 8 போலீஸார் இடமாற்றம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இடமாற்றல் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது.
அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 8 போலீசாரை இடமாற்றம் செய்து மாவட்ட எஸ்.பி. உத்தரவிட்டிருந்தார். இவர்கள் வன்னியர் சமூகத்தைச் ேசர்ந்தவர்கள் என்பதால் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பாமக தலைவர் ஜி.கே.மணி குற்றம் சாட்டியிருந்தார். இதுகுறித்து டிஜிபி ஜெயினிடமும் அவர் புகார் கூறியிருந்தார்.
இந்த நிலையில், எஸ்.பியின் உத்தரவை எதிர்த்து அறிவழகன், அன்பழகன், செல்வக்குமார் உள்பட எட்டு போலீசார் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
அந்த மனுவில் அவர்கள், வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு கைது செய்யப்பட்டபிறகு எங்களுக்கு இந்த இடமாற்றல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாங்கள் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, பழி வாங்கும் நோக்கத்துடன் இந்த இடமாற்றல் உத்தரவை அரியலூர் மாவட்ட எஸ்.பி.பிறப்பித்துள்ளார். எனவே, இந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி பால்வசந்தகுமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி இந்த இடமாற்றல் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.
மேலும், 4 வார காலத்திற்குள் பதில் மனு தாக்கல் செய்ய அரியலூர் மாவட்ட எஸ்.பிக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டார்.