தீ விபத்திலிருந்து காத்த முயல்!
மெல்போர்ன்: வீட்டில் தீவிபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து தனது உரிமையாளரை உஷார்படுத்தி பெரும் விபத்திலிருந்து அவரையும், அவரது மனைவியையும் காத்துள்ளது ஒரு முயல்.
மெல்போர்ன் நகரில்தான் இந்த அரிய சம்பவம் நடந்துள்ளது.
அந்த முயல் இருந்த வீட்டில் நள்ளிரவில் பின்பக்க அறையிலிருந்து புகை வந்துள்ளது. இதைப் பார்த்த முயல், வீட்டு உரிமையாளர் தூங்கிக் கொண்டிருந்த படுக்கை அறையின் கதவை சுரண்டியுள்ளது.
சத்தம் கேட்டு எழுந்த உரிமையாளர் என்னவென்று பார்த்தபோது வீட்டின் பின்பக்க அறையிலிருந்து புகை வருவதை அறிந்து உடனடியாக தீயணைப்புப் படைக்குத் தகவல் கொடுத்தார்.
தீயணைப்புப் படையினர் விரைந்து வந்த தீயை அணைத்தனர். இந்த விபத்தில் அந்த அறை பெரும் சேதத்தை சந்தித்தது. முயல் மட்டும் உஷார்படுத்தி கதவை சுரண்டியிருக்காவிட்டால் வீட்டு உரிமையாளரும், அவரது மனைவியும் நிச்சயம் படுகாயமடைந்திருப்பார்கள் என தீயணைப்பு படை அதிகாரி மைக் ஸ்விப்ட் தெரிவித்தார்.
புத்திசாலித்தனமாக செயல்பட்ட அந்த முயலை வீட்டு உரிமையாளர் பாராட்டி கையில் தூக்கி தோளில் வைத்து அணைத்துக் கொண்டார். இந்த சம்பவம் மெல்போர்னில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.