சிகரெட்: அன்புமணியின் 'பேராசை'!
டெல்லி: 'இந்தியாவை புகைப் பிடிக்காதவர்கள் உள்ள நாடு என்று மட்டும் அல்லாமல் புகையிலையே இல்லாத நாடு என்று மாற்ற வேண்டும். இதுதான் எனது பேராசை' என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி கூறினார்.
டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர், சண்டிகர் நகரை புகை இல்லாத பிரதேசமாக மாற்ற முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும், வரும் 2010ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற உள்ள காமன்வெல்த் போட்டிகளுக்கு முன்னதாக தலைநகர் டெல்லியையும் புகை இல்லாத பகுதியாக்க மாற்ற முதலமைச்சர் ஷீலா தீட்சித் உறுதிக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
பொதுத்துறை, தனியாருக்கு சொந்தமான இடங்களில் புகை பிடிக்க முற்றிலும் தடைவிதிக்க அரசு முடிவு செய்திருப்பதை சிலர் எதிர்க்கிறார்கள். இதில் எந்த்த் தவறுமில்லை. புகைப்பிடிப்பவர்கள் மட்டுமல்ல, அவர்களைச் சுற்றியிருப்பவர்களும் பாதிக்கப்படுவது இந்த தனியார் பகுதிகள் மற்றும் அலுவலகங்களிலும்தான் என்றார் அன்புமணி.
என்னுடைய புகையிலை எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு திரைத்துறையினர் சிலர் கடும் விமர்சனங்களை முன் வைக்கின்றனர். சினிமாவுக்கு நான் எதிரியல்ல. ஆனால் போலியோ ஒழிப்பு போன்ற மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடிய நிகழ்ச்சிகளில் வரும் நடிகர்கள் புகைப்பது தவறுதானே.
சினிமாவில் நடிகர்கள் புகைப்பிடிப்பதைப் பார்த்துதான் 52 சதவிகித இளைஞர்கள் இந்தப் பழக்கத்துக்கு அடிமையாகின்றனர். புகைப் பிடிப்பதன் காரணமாக இந்தியாவில் ஆண்டுக்கு 10 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். இதையெல்லாம் சினிமாக்கார்ர்கள் ஏன் சீரியஸாக எடுத்துக் கொள்வதில்லை என்றார் அன்புமணி.












Click it and Unblock the Notifications