அமைச்சர்கள் என்.கே.கே.பி. ராஜா, சுரேஷ் ராஜனை நீக்க வேண்டும்: ஜெ.
இது குறித்து ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டி வழங்கும் நிகழ்ச்சி வடசேரி எஸ்.எம்.ஆர்.வி. மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற போது தன்னை தமிழக சுற்றுலா மற்றும் பதிவுத்துறை அமைச்சர் என்.சுரேஷ்ராஜன், அரசு வழக்கறிஞர் ஆர்.மகேஷ் மற்றும் அவரோடு வந்த அடியாட்கள் சாதிப் பெயரைச் சொல்லி திட்டியதாகவும், கொலை செய்ய முயன்றதாகவும் தனித் துணை ஆட்சியர் செ.ஜனார்த்தனன் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சி தலைவருக்கு புகார் கடிதம் கொடுத்துள்ளார்.
3 மாத கால தாமதத்திற்குப்பின் இந்த புகாரின் அடிப்படையில் அமைச்சர் சுரேஷ்ராஜன் உட்பட சம்பந்தப்பட்ட அனைவரின் மீதும் இந்திய தண்டனை சட்டம் பிரிவுகள் 147, 294 (பி), 332,120 (பி), 307 மற்றும் வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம் பிரிவு 3 (1) (எக்ஸ்) ஆகியவற்றின் கீழ் வடசேரி காவல் நிலையத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
நிலம் தொடர்பாக எழுப்பப்பட்ட பிரச்சனையில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பழனிச்சாமி, அவரது மனைவி மலர்விழி மற்றும் அவரது மகன் சிவபாலன் ஆகியோரை கடத்தியதோடு மட்டுமல்லாமல் கொன்று விடுவதாகவும் கைத்தறி அமைச்சர் என்.கே.கே.பி.ராஜா மிரட்டியுள்ளார்.
இந்த பிரச்சனையில் சென்னை உயர்நீதிமன்றம் அவர்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டதோடு அமைச்சர் ராஜாவுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டுள்ளது.
மாநில அமைச்சர்களே சட்டத்தை மீறி செயல்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அமைச்சர்கள் சுரேஷ்ராஜன், என்.கே.கே.பி.ராஜா ஆகியோர் தொடர்ந்து அமைச்சரவையில் அமைச்சர்களாக பணியாற்றும் தகுதியை இழந்துவிட்டனர்.
மேலும், தங்களது அதிகார பலத்தை பயன்படுத்தி வழக்குகளில் உள்ள நியாயத்தை சீர்குலைக்கும் முயற்சிகளில் அவர்கள் ஈடுபடக்கூடும். இருவர் மீதும் ஆதாரபூர்வமாக கடுமையான புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் இருவரும் தார்மீக பொறுப்பேற்று அமைச்சர் பதவிகளை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்.
அவர்கள் ராஜினாமா செய்ய முன்வராவிட்டால் அவர்களை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க முதலமைச்சர் கருணாநிதி முன் வர வேண்டும் என்று ஜெயலலிதா கோரியுள்ளார்.