வெடிபொருள் சப்ளை: மைசூர் போலீஸ் சிவகாசி வருகை
சிவகாசி: மைசூர் ரகசிய வெடிகுண்டுத் தொழிற்சாலை விவகாரத்தில் மைசூர் போலீஸார் விசாரணைக்காக சிவகாசி வந்துள்ளனர்.
மைசூர் அருகே மேட்டஹள்ளி என்ற இடத்தில் ரகசியமாக இயங்கி வந்த வெடிகுண்டு தயாரிப்புத் தொழிற்சாலையை நேற்று முன்தினம் போலீஸார் கண்டுபிடித்து சீல் வைத்தனர். அதன் உரிமையாளர் சந்துரு கைது செய்யப்பட்டார். ஏராளமான வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இங்கிருந்துதான் நாட்டின் பல்வேறு பொருட்களுக்கு வெடிகுண்டுகள் தயாரிப்பதற்கான மூலப் பொருட்கள் செல்வதாக போலீஸார் சந்தேகம் தெரிவித்தனர்.
சந்துருவிடம் நடத்திய விசாரணையில், சிவகாசியில் பட்டாசு தயாரிப்பதற்காக இங்கிருந்து மூலப் பொருட்களை அனுப்புவதாக கூறியிருந்தார்.
இதையடுத்து சந்துரு கூறுவது உண்மையா என்பதை அறிவதற்காக மைசூர் தனிப்படை போலீஸார் சிவகாசி வந்துள்ளனர். சந்துரு கூறிய நிறுவனங்களை அணுகி அவர்கள் விசாரணை நடத்தவுள்ளனர்.