தூத்துக்குடி மாநகராட்சி-கருணாநிதி தொடங்கி வைத்தார்
தூத்துக்குடி: தமிழகத்தின் 10வது மாநகராட்சியாக தூத்துக்குடி இன்று உதயமானது. முதல்வர் கருணாநிதி மாநகராட்சியைத் தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் தற்போது சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, திருப்பூர், ஈரோடு மாநகராட்சி வரிசையில் கடந்த ஒன்றாம் தேதி வேலூரும் இணைந்தது.
இதையடுத்து தமிழகத்தின் 10வது மாநகராட்சியாக தூத்துக்குடி இன்று உதயமானது. தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள எஸ்ஏவி பள்ளி மைதானத்தில் இன்று காலை 10 மணிக்கு விழா நடந்தது. அமைச்சர் ஸ்டாலின் தலைமை வகித்தார்.
முதல்வர் கருணாநிதி மாநாகராட்சியைத் தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, புதிய கட்டடங்களை திறந்து வைத்தார். பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பின்னர் உரை நிகழ்த்தினார்.
முன்னதாக சட்டசபையில் மானியக் கோரிக்கையின்போது பேசிய உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலின். அனல்மின் நிலையம் மற்றும் ஏராளமான தனியார் தொழிற்சாலைகளை கொண்ட தொழில் நகரான தூத்துக்குடி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று அறிவித்திருந்தார்.
அதன்படி தூத்துக்குடி நகராட்சியோடு 10 கிராம ஊராட்சிகள் சேர்க்கப்பட்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மாநகராட்சியில் அடிப்படை வசதிகள் உள்பட பல முக்கிய பணிகளை மேம்படுத்த ரூ.16.49 கோடி கோரப்பட்டது. இதை பரிசீலித்த அரசு ரூ.5 கோடியை மானியமாக ஒதுக்கீடு செய்துள்ளது. மீதி தொகையை மாநகராட்சியின், பொது நிதியிலிருந்து எடுத்து செலவு செய்ய அனுமதி வழங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications