பொழுது போக்கிக் கொண்டிருக்கிறார் கருணாநிதி - ராமதாஸ்
திண்டிவனத்தையடுத்த தைலாபுரத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் டாக்டர் ராமதாஸ். அப்போது அவர் கூறுகையில், முதல்வர் உச்சநீதிமன்ற கண்டனத் துக்கு ஆளான விவகாரம் அரசின் நிர்வாக சீர்கேடு சம்பந்தப்பட்டதாகும். நீதிமன்ற கட்டளையை ஏற்று உரிய காலத்தில் பதில் மனு தாக்கல் செய்யாதது அரசின் நிர்வாக தோல்வியையே காட்டுகிறது.
இது தமிழகத்திற்கும், தமிழர்களுக்கும் பெரும் அவமானமாகும். இதில் அப்பாவி வழக்கறிஞர்கள் பலிகடா ஆகியுள்ளனர். அதே சமயம் தொலை பேசி ஒட்டு கேட்பு விவகாரத்தில் 3 மாதத்துக்குள் அறிக்கை பெறப்பட்டு வேகமாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
முதல்வர் கருணாநிதியும், அவரது அரசும் ஆடம்பர விழாக்களை நடத்துவதில் காலத்தை கடத்திக்கொண்டு இருக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு தூத்துக்குடி மாநகராட்சி விழாவுக்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் செலவானதாக புகார் எழுந்து உள்ளது.
1 லட்சம் கோப்புகள் தேக்கம்:
மூன்று நாட்கள் கோட்டையை விட்டு 12 அமைச்சர்களும் விழாவுக்கு சென்று உள்ளனர். இந்த விழாவை சென்னையி லிருந்தே துவக்கியிருக் கலாம். மற்றொரு விழா மதுரையில் நடந்துள்ளது. இதில் 10 அமைச்சர்கள் கலந்துகொண்டிருக்கிறார்கள். மக்கள் முகம் சுழிக்கும் வகையில் போக்கு வரத்துக்கு இடைஞ்சலாக விழா நடத்த வேண்டிய அவசியம் என்ன?
கோட்டையில் கோப்புகள் ஒரு லட்சத்துக்கும் மேலாக தேங்கிக் கிடப்பதாக என்னிடம் ஒரு அதிகாரி தெரிவித்தார். அமைச்சர்கள் சென்னையில் இருந்தாலும், கோட்டைக்கு செல்வதில்லை. கோட்டைக்கு சென்றாலும் கோப்புகள் பார்ப்பதில்லை.
பொழுதுபோக்கும் கருணாநிதி:
முதல்வர் கருணாநிதி இந்த இரண்டரை ஆண்டுகாலத்தில் சினிமா பார்ப்பதிலும், சின்ன சின்ன சினிமா விழாக்களை பலமணி நேரம் அமர்ந்து கண்டு களிப்பதிலும் பொழுதைக் கழித்திருக்கிறார்.
சினிமா சம்பந்தப்பட்ட விழாக்களில் கலந்து கொள்ளக்கூடாது என கூறமாட்டேன். ஆனால் அதற்கு முக்கியத்துவம் கொடுப்பது சரியல்ல என்பதே எனது கருத்தாகும்.
இதுவரை 29 ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. 30 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு என்று கூறியிருக்கிறார்கள். இதுபற்றிய புள்ளி விவரங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்.
கர்நாடக முதல்வர் எடியூரப்பா ஒகேனக்கல் பகுதியை ரீசர்வே செய்ய வேண்டும் என்று கூறுகிறார். அப்படியானால் மைசூர், பெங்களூர், கொள்ளேகால் உள்ளிட்ட தமிழர்கள் வசிக்கும் கர்நாடக பகுதிகளையும் ரீசர்வே செய்ய வேண்டும்.
மண்- நீர் உரிமை இழந்தோம்:
திராவிடக்கட்சிகளின் ஆட்சியில் குறிப்பாக கருணாநிதியின் ஆட்சியில் மண்ணையும்,நீர் உரிமையையும் இழந்து நிற்கிறோம். எந்த மாநிலத் னுடனான பிரச்சனையிலும் தமிழகத்தின் உரிமையை கருணாநிதி நிலை நாட்டியது கிடையாது.
நாம் உரிமைகளை இழந்ததற்கு துணிச்சலான முடிவுகளை இந்த அரசு எடுக்காததுதான் காரணம். பெங்களூருக்கு குடிநீர் கொண்டு சென்றபோது ஒகேனக்கல் திட்டத்தை நிறைவேற்றியிருந்தால் இந்த பிரச்சனை ஏற்பட்டிருக்காது.
தமிழகத்தில் விடுதலைப்புலிகளை கட்டுக்குள் வைத்திருப்பதாக மக்களிடம் காட்டிக்கொள்வதற்காக முதல்வர் ஊடகங்கள் மூலம் கைது நடவடிக்கைகளை பெரிதுபடுத்தி காட்டி வருகிறார்.
இத்தனை அமைச்சர்களை வைத்துக் கொண்டு அரசு திறம்பட செயல்பட வில்லை. திறமையான அதிகாரிகள் வெளியில் அனுப்பப்பட்டு விடு கிறார்கள். இருந்தாலும் அவர்களை செயல்பட விடுவதில்லை.
கோட்டையிலும், மாவட்ட நிர்வாகத்திலும், காவல்துறை நிர்வாகத்திலும் பிற மாநிலத்தவர்கள் தான் உள்ளனர். இதுதான் இவர்களது மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி லட்சணம் என்றார் ராமதாஸ்.