'பைக் பெட்ரோல் டேங்க் குண்டுகள்' - தியேட்டர்களுக்கு போலீஸ் எச்சரிக்கை
நெல்லை: பைக்குகளின் பெட்ரோல் டேங்க்கில் வெடிபொருளைப் பதுக்கி தியேட்டர்களில் வெடிக்க வைக்க தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்தும்படி போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பைக்கின் பெட்ரோல் டேங்குகளில் பாலித்தின் பையில் வெடிகுண்டுகள் தயாரிக்க பயன்படக் கூடிய மைக்ரோசிப், மினி எலக்ட்ரானிக் சர்கியூட், பேட்டரி, ஜெலட்டின் பியூஸ், சிறிய வயர்கள் உள்ளிட்டவற்றை பிளாஸ்டிக் பையில் வைத்து மறைத்து தீவிரவாதிகள் எளிதில் கடத்துவதாக உளவுத்துறைக்கு அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.
தற்போது தமிழகம் முழுவதும் போலீசார் உஷார் நிலையில் உள்ளதால் இந்த பொருட்களை சாதாரணமாக எடுத்து சென்றால் போலீசாரிடம் சிக்கி விடுவோம் என்று பெட்ரோல் டேங்க் உத்தியை தீவிரவாதிகள் கையாள்வதாக உளவுத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தீவிரவாதிகள் குண்டு வெடிப்பை நிகழ்த்த திட்டமிட்டுள்ளதால் பஸ் நிலையம், ரயில் நிலையம், மார்கெட் மற்றும் தியேட்டர்களில் பைக்கில் வந்து குண்டுகளை வைக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இதன் காரணமாக தமிழகத்தின் அனைத்து செக்போஸ்டுகளிலும் சந்தேகப்படும்படியாக வரும் பைக்குகளை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.