குமரியில் முதன்முறையாக ரேசன்கார்டு கோரி அரவாணி மனு
நாகர்கோவில்: கன்னியாகுமரியில் முதன்முறையாக ரேசன் கார்டு கோரி கலெக்டரிடம் அரவாணி மனு கொடுத்துள்ளார்.
குமரி மாவட்டம் வாணியக்குடியை சேர்ந்தவர் ஆன்றோ வில்சன். இவர் திருநங்கையான (அரவாணி) பின் தனது பெயரை ஸ்டெல்லா என மாற்றிக் கொண்டார்.
கடந்த 6 மாதங்களுக்கு முன் பெங்களூரை சேர்ந்த தினேஷ்குமார் என்ற வாலிபரை சொந்த ஊரில் வைத்து திருமணம் செய்து கொண்டார். தற்போது தினேஷ்குமார் சிங்கபூரில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையி்ல் அவருடன் ஸ்டெல்லாவும் சிங்கப்பூர் செய்ய திட்டமிட்டுள்ளார்.
இதற்காக பாஸ்போர்டுக்கு விண்ணப்பிக்க வசதியாக ரேசன் கார்டு வழங்குமாறு கலெக்டர் ஜோதி நிர்மலாவை நேரில் சந்தித்து அவர் மனு கொடுத்தார். அந்த மனுவில்,
நான் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் மும்பை சென்றேன். பின்னர் பெங்களூருக்கு வந்து அறுவை சிகிச்சை மூலம் பெண்ணாக மாறி எனது பெயரை ஸ்டெல்லா என்று மாற்றிக் கொண்டேன். எனக்கு தற்போது 28 வயதாகிறது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பெங்களூரை சேர்ந்த தினேஷ் என்ற வாலிபரை காதலித்து வீட்டில் உள்ள அனைவரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டேன்.
தற்போது எனது கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். நானும் அவருடன் வெளிநாடு செல்வதற்கு பாஸ்போர்ட் தேவைப்படுகிறது. பாஸ்போர்ட் எடுக்க ரேசன் கார்டு தேவைப்படுவதால் எனக்கு அரவாணிகள் நலவாரியத்தின் கீழ் ரேசன் கார்டு பெறுவதற்கு ஆவன செய்ய வேண்டும் என்று கோரியுள்ளார்.