சென்னையில் பிடிபட்ட கூலிப்படை - விஜயன் கொலையில் தொடர்பு?
சென்னை: சென்னையில் கைதான கூலிப்படையினரில் 2 பேருக்கு மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகள் லதாவின் கணவர் விஜயன் கொலையில் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
விஜயன் கடந்த ஜூன் மாதம் காரில் சென்றபோது மர்ம கும்பலால் வழிமறித்து வெட்டிக் கொல்லப்பட்டார். கூலிப்படை மூலம் விஜயன் கொல்லப்பட்டது தெரிய வந்தது.
இது தொடர்பாக விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. கொலை தொடர்பாக எந்த துப்பும் கிடைக்காததை அடுத்து, வழக்கு சிபிசிஐடி போலீஸூக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி போலீஸ் விசாரணையிலும் இதுவரை துப்பு துலங்கவில்லை.
இந்நிலையில் சென்னையில் கூலிப்படையினர் 6 பேர்கைது செய்யப்பட்டனர். நேற்று முன்தினம் அதிகாலையில் துணை கமிஷனர் மவுரியா, உதவி கமிஷனர் கண்ணபிரான், இன்ஸ்பெக்டர் ஜாண்அருமை ராஜ் ஆகியோர் தேனாம் பேட்டையில் வாகன சோதனை நடத்தினார்கள்.
அப்போது அங்கு வந்த ஒரு காரை மடக்கினார்கள். அதில் இருந்தவர்கள் போலீஸாரை தாக்கிவிட்டு தப்பி செல்ல முயன்றனர். ஆனால் போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்கள் அனைவரும் கூலிப்படையினர் என்பது தெரியவந்தது.
காரில் இருந்து பட்டாக்கத்திகள், உருட்டுக்கட்டைகள், 7 செல்போன்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தேனாம்பேட்டையை சேர்ந்த கூலிப்படை தலைவன் சார்லஸ் (27), ராயப்பேட்டை மணி, நடராஜ், தயாளன், தேனாம்பேட்டை சந்திரகாசன், கணேசன், சதீஷ் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
விசாரணையில் சார்லஸ், பணம் வாங்கிக் கொண்டு பணம் கொடுத்தவர் குறிப்பிடும் நபரை கூலியாட்களை வைத்து கொலை செய்து வந்தது தெரிய வந்தது. நேற்று முன்தினமும் புலிப்பாக்கத்தில் ஒருவரை கொலை செய்ய சென்றுள்ளனர்.
செந்தில் என்ற சாராய வியாபாரி தனது எதிரி ஒருவரை கொலை செய்யும்படி கூறி ரூ.50,000 கொடுத்துள்ளார். புலிப்பாக்கம் கோவில் விழாவில் வைத்து அந்த நபரை கொலை செய்ய திட்டமிட்டிருந்தனர்.
ஆனால் கோவிலில் கூட்டம் அதிகமாக இருந்ததால் அவரை கொலை செய்ய முடியாமல் திரும்பி விட்டனர். திரும்பி வரும்போதுதான் வழியில் போலீஸாரிடம் சிக்கியுள்ளனர் என்பது தெரியவந்தது.
கைது செய்யப்பட்டுள்ள சதீஷ் என்ற ரவுடி ஏற்கனவே ஒரு கொலை வழக்கு தொடர்பாக செங்கல்பட்டு போலீசில் சரண் அடைந்தார். அவரிடம் ஏற்கனவே சிபிசிஐடி போலீசார் விஜயன் கொலை தொடர்பாக விசாரித்தார்கள்.
மணிக்கும், சதீசுக்கும் விஜயன் கொலையில் தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதையடுத்து இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications