அணு ஒப்பந்தம்-விரிவாக பேசாத பிரதமர்
டெல்லி: பிரதமர் மன்மோகன் சிங் இன்று ஆற்றிய சுதந்திர தின உரையின்போது அணு சக்தி ஒப்பந்தம் குறித்து நேரடியாகக் குறிப்பிடவில்லை.
டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மன்மோகன் சிங் இன்று சுதந்திர தின உரையாற்றினார். அப்போது அணு சக்தியின் அவசியம்குறித்து வலியுறுத்தினார். ஆனால் இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் குறித்து விரிவாக அவர் குறிப்பிடவில்லை.
பிரதமர் பேசுகையில், அணு சக்தி ஒப்பந்தம் இந்தியா, பிற நாடுகளிடமிருந்து தனிமைப்படுத்தப்படும் அபாயத்தை தவிர்க்க உதவும்.
நவீன அறிவியலையும், தொழில்நுட்பத்தையும், பெருகி வரும் எரிபொருள் தேவைகளை பூர்த்தி செய்ய நீண்ட கால தீர்வை ஏற்படுத்த பயன்படுத்த வேண்டும்.
கச்சா எண்ணை மற்றும் எரிவாயுவின் சேமிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வரும் நிலையில் அணு சக்தி அவசியம் தேவை.
சூரிய சக்தி, காற்றாலை மின்சாரம், பயோ காஸ் ஆகியவற்றை சிறந்த முறையில் பயன்படுத்தத் தேவையான வழிகளை விஞ்ஞானிகளும், என்ஜீனியர்களும் கண்டுபிடிக்க வேண்டும்.
பெருகி வரும் மின் தேவையைப் பூர்த்தி செய்ய அணு மின்சாரம் மிகவும் அவசியம். இதன் மூலம் தட்பவெப்ப மாற்றத்தையும் நாம் தவிர்க்க முடியும்.
இது சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை விளைவிக்காதது. மீண்டும் மீண்டும் பயன்படுத்த முடியும். இந்தியாவின் அணு விஞ்ஞானிகளும், தொழில்நுட்ப நிபுணர்களும் உலகத் தரம் வாய்ந்தவர்கள். நம்மால் முடியுமா என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கும் நிலையில் அணு சக்தியை திறம்பட கையாளும் திறமையை நமது விஞ்ஞானிகள் பெற்றுள்ளனர்.
நம்மிடம் யுரேனியப் பற்றாக்குறை மட்டுமல்ல, பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது தரம் குறைவான யுரேனியமே இருக்கிறது. மேலும், நம் மீது பல நாடுகள் அணு பொருளை வாங்க தடை விதித்துள்ளன. தொழில்நுட்பமும் நமக்குக்கிடைக்காது. இதையெல்லாம் நாம் மனதில் கொள்ள வேண்டும்.
எனவேதான் வளர்ந்த நாடுகளுடன் நாம் இதுதொடர்பாக பேசிக் கொண்டிருக்கிறோம். ஒப்பந்தங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம். இதன் மூலம் நமக்கு பல புதிய வாய்ப்புகள் கிடைக்கும். முன்னேற்றம் வேகமாக இருக்கும். நமது தொழில்மயமாக்கல் அதிகரிக்கும்.
நம்முடைய மின்சார இருப்பு நமது பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் முட்டுக்கட்டையாக உள்ளது. இதனை வைத்துக் கொண்டு நம்மால் வறுமை, வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிப்பது சிரமமானது என்றார் பிரதமர்.












Click it and Unblock the Notifications