ஒரு பெண் அடுத்த ஜனாதிபதி ஆவார் - சர்தாரி தகவல்
{image-Asif Ali Zardari250_17082008.jpg tamil.oneindia.com}இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் அடுத்த பிரதமராக ஒரு பெண் வரக் கூடும் என பாகிஸ்தான் மக்கள் கட்சியின் இணைத தலைவர் ஆசிப் அலி சர்தாரி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப்பின் நாட்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கின்றன. விரைவில் அவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்து விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் பாகிஸ்தானின் ஏஆர்ஒய் டிவிக்கு சர்தாரி அளித்துள்ள ஒரு பேட்டியில், பாகிஸ்தானின் அடுத்த ஜனாதிபதியாக ஒரு பெண் வரக் கூடும் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், பாகிஸ்தானின் அடுத்த ஜனாதிபதி பதவிக்கு நான் வர மாட்டேன். அனேகமாக ஒரு பெண்வரக் கூடும். இதுதொடர்பாக பாகிஸ்தான் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சு நடத்தி சுமூகமான முறையில் முடிவு செய்யப்படும்.
முஷாரப் பதவியிலிருந்து அகன்றவுடன், பாகிஸ்தான் அரசியல் முறையில் பெரும் மாற்றங்கள் ஏற்படும். வெளிநாட்டுக் கொள்கையிலும் மாற்றம் இருக்கும். நாட்டின் ஒட்டுமொத்த அமைப்பிலும் மாற்றங்கள் வரும்.
முஷாரப் போனவுடன் இந்தியா, ஆப்கானிஸ்தான், ஈரான்,அரபு நாடுகளின் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய திட்டமிட்டுள்ளேன். அப்போது பிராந்திய பிரச்சினைகள் குறித்து விரிவாக பேசப்படும்.
பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைமையிலான அரசை கவிழ்க்க முஷாரப் சதி செய்வதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்தே அவரை கண்டனத் தீர்மானம் மூலம் நீக்க தீர்மானித்தோம். இதன் மூலம் நாடாளுமன்றத்தை விட தான்தான் மிகப் பெரியவர் என்று மக்களிடையே கருத்தை உருவாக்க நினைக்கிறார் முஷாரப்.
முஷாரப் பதவியிலிருந்து நீக்கப்பட்டால்தான் ஜனநாயகத்திற்கு முழு வெற்றி கிடைக்கும். முஷாரப்புக்குப் பின்னர் பாகிஸ்தானில் புதிய அத்தியாயம் எழுதப்படும். அனைத்துப் பிரச்சினைகளுக்கும் சுமூகமான பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும். இனிமேல் வரும் ஒவ்வொரு ஜனாதிபதியும் நாடாளுமன்றத்திற்குக் கட்டுப்பட்டவர்களாக இருப்பார்கள் என்றார் அவர்.