மர்ம நபர்கள் நடமாட்டம்: 10 கிராமங்களில் போலீசார் அதிரடி சோதனை
தூத்துக்குடி: வெளிமாநிலங்களைச் சேர்ந்த மர்ம நபர்களின் நடமாட்டம் அதிகரித்திருப்பதைத் தொடர்ந்து, தூத்துக்குடி சுற்று வட்டார பகுதிகளில் உள்ள 10 கிராமங்களில் நேற்று போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
தூத்துக்குடி சுற்று வட்டார பகுதிகளில் கொலை, கொள்ளை, வழிப்பறி சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. வெளிமாவட்டத்தைச் சேர்ந்த நபர்கள் இங்கு தங்கியிருந்து இதுபோன்ற சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுகிறார்களா என்று விசாரனை நடத்த போலீசார் முடிவு செய்தனர்.
அதன்படி மாவட்ட எஸ்பி தீபக் டமோர் உத்தரவின்படி தூத்துக்குடியை சுற்றி உள்ள கிராமங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அவர்கள் சீருடை அணியாமல் சாதாரண உடையில் சோதனையில் இறங்கினர்.
குலையன் கரிசல், திரவியபுரம், சேர்வைகாரன்மடம், கூட்டாம்புளி, தங்கம்மாள்புரம், ஜக்கம்மாள்புரம், தேரி, புதுக்கோட்டை, சாயர்புரம் ஆகிய இடங்களில் சோதனை நடந்தது.
அப்போது அங்குள்ள காட்டு பகுதியில் தீவிரவாதிகள், சமூக விரோதிகள் மற்றும் சந்தேகப்படும்படியாக யாராவது பதுங்கி இருக்கிறார்களா என்று தேடினார்கள். அந்த கிராமத்தை சேர்ந்தவர்களிடமும் சந்தேகப்படும்படியானவர்கள் மற்றும் வெளி மாவட்டதைச் சேர்ந்தவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று விசாரனை நடத்தினர்.












Click it and Unblock the Notifications