லாரிகள் தாமதமாம்..அதனால் டீசல் பஞ்சமாம்!
டெல்லி: டேங்கர் லாரிகள் வரத் தாமதமாகியதால்தான் தமிழகத்தில் டீசலுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா கூறியுள்ளார்.
டெல்லியில் நேற்று நடந்த எண்ணை நிறுவன அதிகாரிகளின் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து தியோரா கூறுகையில், தமிழகத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் இல்லாத காரணத்தால் விற்பனை நிலையங்கள் மூடப்பட்டுள்ள சம்பவம் தொடர்பாக எண்ணை நிறுவன அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு எரிபொருட்களை எடுத்துச் செல்லும் லாரிகளால் ஏற்படும் காலதாமதம்தான் தமிழகத்தின் டீசல் தட்டுப்பாட்டிற்கு காரணம். இப்பிரச்சினை தற்போது நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதால் தமிழகத்தில் டீசல் தட்டுப்பாடு எதுவும் ஏற்பட வாய்ப்பே இல்லை.
தொழிற்சாலைகள் தேவைக்காக டீசலை அதிக அளவில் கொள்முதல் செய்யும் நிறுவனங்களுக்கு டீசல் விலையை அதிகரிப்பது தொடர்பாகவும் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. இதனை மத்திய அரசு விரைவில் அமலுக்கு கொண்டு வரும் என்றார் தியோரா.
இருப்பினும் இன்றும் பெட்ரோல், டீசலுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவியது. பெரும்பாலான பெட்ரோல் விற்பனை நிலையங்கள் இன்னும் திறக்கப்படவில்லை. இன்னும் ஸ்டாக் வரவில்லை என்று விற்பனை நிலையங்களில் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications