சுரேஷ்ராஜனுக்கு எதிராக போராட்டம்: அதிமுகவுக்கு ஐகோர்ட் அனுமதி
மதுரை: தமிழக அமைச்சர் சுரேஷ்ராஜனுக்கு எதிராக போராட்டம் நடத்த போலீஸ் அனுமதி அளிக்க கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் அதிமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு நீதி மன்றம் அனுமதி அளித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் கடந்த ஏப்ரல் மாதம் 18ம் தேதி அரசு சார்பில் கலர் டிவி வழங்கும் விழா நடைபெற்றது. அப்போது சுற்றுலாத்துறை அமைச்சர் சுரேஷ்ராஜனுக்கும், சப்-கெலக்டர் ஜனார்த்தனனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
அப்போது தன்னை ஜாதி பெயரை சொல்லி ஒருமையில் திட்டியதாக தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் சுரேஷ்ராஜன் மீது சப்- கலெக்டர் ஜனார்த்தன் வடசேரி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
இந்த நிலையில் பல கட்ட பேச்சுவார்தைக்கு பிறகு போலீசார் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் சுரேஷ்ராஜன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நான்கு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு மட்டும் செய்தனர். வழக்கு பதிவு செய்து பல நாட்களாகியும் அவர்களை கைது செய்யவில்லை.
இதனால் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் சுரேஷ்ராஜன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம் நடத்த பல அமைப்பை சேர்ந்தவர்கள் போலீசாரிடம் அனுமதி கேட்டனர். ஆனால் போலீசார் அதற்கு அனுமதி தரவில்லை.
இந்த நிலையில் அதிமுக வழக்கறிஞர்கள் தமிழ்செல்வன், கிருஷ்ணதாஸ் ஆகியோர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர். அதில், அமைச்சர் சுரேஷ்ராஜன் மீது நியாயமான விசாரணை நடத்த வேண்டும் என்றும், அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கடந்த 5.8.2008 மற்றும் 6.8.2008 ஆகிய தினங்களில் அமைதி போராட்டம் நடத்த போலீசாரிடம் அனுமதி கோரினோம்.
சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி அந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி வழங்க மறுத்துவிட்டனர். இது ஜனநாயக நாட்டில் அடிப்படை உரிமையை மறுப்பதாகும். எனவே அமைதி வழியில் போராட்டம் நடத்த போலீசார் அனுமதி வழங்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சந்துரு, அமைச்சர் சுரேஷ்ராஜனுக்கு எதிராக போராட்டம் நடத்த அனுமதி அளித்தார்.












Click it and Unblock the Notifications