ஆர்.சி.வி. மீது வழக்கு-சன் டிவி கோரிக்கை நிராகரிப்பு
சென்னை: மு.க.அழகிரியின் ராயல் கேபிள் விஷன் மீது வழக்குப் பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவிடக் கோரி சன் டிவி நிறுவனம் சார்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்து விட்டது.
முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி ஆரம்பித்துள்ள ராயல் கேபிள் விஷனுக்கும், (ஆர்.சி.வி) சன் டிவி நிறுவனத்திற்கும் மதுரையில் மோதல் மூண்டுள்ளது. சன் குழும சானல்களை ஆர்.சி.விக்குத் தர வேண்டும் என கோரப்பட்டது. ஆனால் அதை சன் டிவி நிராகரித்து விட்டது. இதனால் மதுரையில் சன் டிவி சானல்கள் பல நாட்களாக தெரியாமல் இருட்டடிப்பு செய்யப்பட்டது.
இந்த நிலையில் ஆர்.சி.வி. மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி சன் டிவிசார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், எங்களது சேனல் சிக்னல்களை சட்டவிரோதமாக திருடி வருகிறது ஆர்.சி.வி. இதுகுறித்து பல்வேறு காவல் நிலையங்களில் பலமுறை புகார்கள் கொடுத்தும் போலீஸார் புகார்களை ஏற்று வழக்குப் பதிவு செய்ய மறுத்து வருகின்றனர்.
எனவே ஆர்.சி.வி. நிறுவனம் மீது புகார் பதிவு செய்து நடவடிக்ைக எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே.வெங்கட்ராமன், அரசியல் சட்டத்தின் 226வது பிரிவின் கீழ் இந்த மனு மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட நீதிமன்றத்தால் முடியாது.
இருப்பினும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் மனுதாரர், உள்ளூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களை அணுகி புகார் பதிவு செய்ய முடியும் என்று கூறி சன் டிவியின் கோரிக்கையை நிராகரித்தார்.












Click it and Unblock the Notifications