சென்னை தி.நகர் மேம்பாலத்தால் இடையூறு-அதிமுக
சென்னை: சென்னை தி.நகர் வடக்கு உஸ்மான் சாலை, துரைசாமி சாலையை இணைக்கும் புதிய மேம்பாலத்தால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாவதாகவும், இதனால் அங்கு செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றத்தினை திரும்பப் பெற வேண்டும் எனவும் மாநகர காவல்துறை ஆணையரிடம் அதிமுக புகார் செய்துள்ளது.
இந்தப் புதிய பாலம் சமீபத்தில்தான் முதல்வர் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது. இதையடுத்து இப்பகுதியில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இப்பாலத்தால் வாகன ஓட்டிகளுக்கு பிரச்சினை ஏற்படுவதாக அதிமுக புகார் கூறியுள்ளது. இன்று காலை தி.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.பி.கலைராஜன், சங்கரன்கோயில் சட்டமன்ற உறுப்பினர் கருப்பசாமி உள்பட அதிமுகவைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்டவர்கள் கமிஷனர் சேகரை சந்தித்து தி.நகரில் கட்டப்பட்டுள்ள மேம்பாலம் தொடர்பாக புகார் தெரிவித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர்கள் பேசுகையில், தி.நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தையொட்டி செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றம் காரணமாக வாகன ஓட்டிகள் பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள்.
முத்துசாமி ரோடு, பர்கிட் ரோடு, மேட்லி ரோடு ஆகிய ரோடுகளில் பள்ளிகள் அதிகமாக இருப்பதால் போக்குவரத்து மாற்றம் காரணமாக மாணவர்களும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். எனவே ஏற்கனவே இருந்ததுபோல இந்த ரோடுகளில் போக்குவரத்தை அனுமதிக்க வேண்டும்.
நடைபாதை கடைகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதால் மங்கை தெரு, சுப்பிரமணியம் தெரு, வெங்கடேசன் தெரு ஆகிய தெருக்களில் வசிக்கும் மக்களுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. எனவே நடைபாதை கடைகளுக்கு மாற்று இடம் தர வேண்டும்.
கட்சியின் மேலிடம் கூறிய யோசனைப்படி நாங்கள் போலீஸ் கமிஷனரிடம் நேரில் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளோம் என்று கலைராஜன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications