தமிழக டீசல் தட்டுப்பாடு-சரத்குமார் சந்தேகம்
சென்னை: தமிழகத்தில் டீசல் தட்டுப்பாட்டை வேண்டுமென்றே உருவாக்கி விற்பனையை குறைக்கிறார்களோ என்ற சந்தேகம் மீண்டும் எழுந்துள்ளது என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சென்னை மற்றும் புறநகரங்களில் திடீரென டீசல் மற்றும் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே ஏற்பட்ட டீசல் மற்றும் பெட்ரோலிய பொருட்கள் தட்டுப்பாட்டால் மாநிலமே ஸ்தம்பிக்கும் நிலைமை ஏற்பட்டது.
அப்போது கச்சா எண்ணெய் விலை உயர்வாலும் நமக்கு வர வேண்டிய டேங்கர்கள் வர தாமதமானதாலும் அந்த நிலை ஏற்பட்டதாக, அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.
அந்த நிலைமை சரியான ஒரு மாதத்திற்குள் மறுபடியும் சென்னையிலும் புறநகரங்களிலும் கடும் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள், தங்களுக்கு எண்ணெய் நிறுவனங்கள் சப்ளையை தாமதப்படுத்தி அனுப்புவதாக கூறுகின்றனர்.
முதன்முறை டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டபோது வேண்டுமென்றே இதுபோன்ற தட்டுப்பாட்டை உருவாக்கி விற்பனையை குறைக்கிறார்களோ என்ற சந்தேகத்தை உருவாக்கியது. மறுபடியும் அதே சந்தேகம் நமக்கு ஏற்படுகிறது.
ஒருபுறம் டீசல், பெட்ரோலியப் பொருட்கள் விலை உயர்வை, அரசே மானியமாக பெட்ரோலிய கம்பெனிகளுக்கு வழங்குகிறது என்னும் தோற்றத்தை மக்களுக்கு ஏற்படுத்திவிட்டு, மறுபுறம் டீசல் தட்டுப்பாட்டை செயற்கையாக உருவாக்கி, நஷ்டத்தை தவிர்க்கிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.
பெட்ரோலியப் பொருட்களைப் பொறுத்தவரை இது மத்திய அரசின் கீழ் வரும் நடவடிக்கை என்று சும்மா இருக்க முடியாது. மாநில அரசின் கீழ் வரும் சிவில் சப்ளை கார்ப்பரேஷன் மூலமாக, வழங்கப்பட்டிருக்கும் பெட்ரோலிய பொருட்களுக்கான லைசன்சை கண்காணித்து தட்டுப்பாடின்றி டீசல் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
மின்சார தடையை சரி செய்ய முடியாத மாநில அரசு, மின்சாரத் தட்டுப்பாடு இருக்கும்போது டீசல் ஜெனரேட்டர்களைத் தான் பெரும்பாலான சிறு, குறு தொழிற்சாலைகளும், விவசாயிகளும் நம்பி இருக்கின்றனர் என்ற உண்மையை உணர வேண்டும்.
எனவே, மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு பெட்ரோல், டீசல் தடையின்றி கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications