நேட்டோ-ரஷ்ய ராணுவ ஒத்துழைப்பு சஸ்பெண்ட்

போலந்தில் அமெரிக்காவின் ஏவுகணை எதிர்ப்பு ஏவுகணைகளை நேட்டோ நிறுவ திட்டமிட்டுள்ளது. இதற்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆனாலும் அதை அமெரிக்கா கண்டுகொள்ளவில்லை.
மேஸும் அமெரிக்காவுக்கு ஆதரவாக இருக்கும் ஜார்ஜியா நேட்டோ அமைப்பில் சேர முயற்சித்து வருகிறது. இதனால் தான் ஜார்ஜியாவை ரஷ்யா தாக்கியது.
இந் நிலையில் நேட்டோவுக்கான ரஷ்ய தூதர் டிமிட்ரி ரோகோஸின் கூறுகையில், நேட்டோவுடனான ராணுவ ஒத்துழைப்பு சிக்கலான விஷயமாகியிருக்கிறது. இதற்கு தீர்வு காணப்படும் வரை ஒத்துழைப்பை நிறுத்தி வைக்க ரஷ்ய தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். எனவே நேட்டோ அமைப்புக்கு வழங்கி வந்த ராணுவ ஒத்துழைப்பை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
நேட்டோவுடனான அனைத்து ஒத்துழைப்புகள் குறித்தும் விரிவாக பரிசீலிக்கப்படும். அதன் அடிப்படையில் அடுத்த கட்ட முடிவுகள் எடுக்கப்படும் என்றார்.
ரஷ்யாவின் முடிவைத் தொடர்ந்து தற்போது பிரஸ்ஸல்ஸில் (நேட்டோ தலைமையிடம்) இருக்கும் ரோகோஸின் உடனடியாக மாஸ்கோ திரும்புகிறார்.
ஜார்ஜியாவிலிருந்து ரஷ்ய படைகள் முழுமையாக விலகும் வரை ரஷ்யாவுடனான தொடர்புகளை நிறுத்தி வைக்க ஏற்கனவே நேட்டோ அமைப்பு தீர்மானித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில், ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கூறுகையில், மேற்கத்திய ராணுவ கூட்டணி எந்தப் பாதையில் செல்லத் திட்டமிடுகிறதோ அதைப் பொறுத்துதான் ரஷ்யாவுக்கும், நேட்டோவுக்கும் இடையிலான எதிர்கால உறவுகள் அமையும் என்றார்.
ஜார்ஜியாவை பாதுகாக்க நேட்டோ முயல்வதாக ரஷ்யா குற்றம் சாட்டி வருகிறது. ஜார்ஜியாவின் தவறுகளை மறைக்க முயல்வதாகவும் அது நேட்டோவை குற்றம் சாட்டியிருந்தது.
ஏற்கனவே ஜார்ஜியா தனது படை பலத்தை வலுப்படுத்திக் கொள்ள நேட்டோ உதவும் என நேட்டோவுக்கான பிராந்திய பிரதிநிதி ராபர்ட் சிம்மன்ஸ் தெரிவித்துள்ளார். இதுவும் ரஷ்யாவை கோபப்டுத்தியுள்ளது.
இந்த நிலையில்தான் தனது ராணுவ ஒத்துழைப்பை ரஷ்யா சஸ்பெண்ட் செய்துள்ளது.
ஓசேஷியாவிலிருந்து விலகும் ரஷ்யா:
இதற்கிடையே, தெற்கு ஓசேஷியாவிலிருந்து ரஷ்யப் படைகள் விலக ஆரம்பித்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் அனடோலி செர்டியுகோவ் தெரிவித்துள்ளார். ரஷ்ய அதிபரின் உத்தரவுக்கேற்ப இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
வெள்ளிக்கிழமை முதல் ரஷ்ய படைகள் விலகத் தொடங்கியுள்ளன. ஏற்கனவே இருந்த நிலைகளுக்கு அவை திரும்பத் தொடங்கியுள்ளன. விரைவில் ஜார்ஜியப் பிரதேசத்திலிருந்து ரஷ்யப் படைகள் விலகி விடும் என்றார் அவர்.
ரஷ்ய அமைதி காக்கும் படைப் பிரிவுகள் மட்டும் சில குறிப்பிட்ட இடங்களில் நிலை கொண்டிருக்கும் என்றும் செர்டியுகோவ் தெரிவித்தார்.
10 நாட்களில் படை வாபஸ் முடிவடையும் என ரஷ்ய தரைப்படை கமாண்டர் விலாடிமிர் போல்டிரெவ் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications