சுரேஷ் ராஜனை நீக்கக் கோரி அதிமுக ஆர்ப்பாட்டம்
சென்னை: சிறப்பு துணை கலெக்டரை ஜாதிப் பெயரைச் சொல்லி திட்டிய சுற்றுலாத்துறை அமைச்சர் சுரேஷ்ராஜனை நீக்கக் கோரி நாகர்கோவிலில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஏப்ரல் 18ம் தேதி நடந்த இலவச டிவி அளிப்பு விழாவின்போது, தாழ்த்தப்பட்ட வகுப்பைச் ேசர்ந்த சிறப்பு துணை கலெக்டர் ஜனார்த்தனை, ஜாதிப் பெயரைச் சொல்லி அமைச்சர் சுரேஷ் ராஜன் திட்டியுள்ளார். கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவரிடம் ஜனார்த்தன், அமைச்சர் சுரேஷ் ராஜன் மீது புகார் கொடுத்துள்ளார். ஆனால் அந்தப் புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
3 மாதங்கள் கழித்து, ஜனார்த்தனுக்கு மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து அவர் மாநில மனித உரிமைகள் ஆணையத்திடம் புகார் கொடுத்தார். இதையடுத்து போலீஸார் அமைச்சர் உள்ளிட்டோர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதற்குப் பொறுப்பேற்று அமைச்சர் சுரேஷ் ராஜன் ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது அவரை முதல்வர் கருணாநிதி டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று நான் கோரியிருந்தேன். ஆனால் அந்தக் கோரிக்கையை முதல்வர் நிராகரித்து விட்டார். இந்தப் பின்னணியில் அமைச்சர் சுரேஷ்ராஜனை டிஸ்மிஸ் செய்யக் கோரி அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.
முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் தலைமையில், மாவட்ட செயலாளர் பிச்சம்மாள் முன்னிலையில், நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெறும்.
இந்தப் போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்திருந்தது. இதையடுத்து அதிமுக மதுரை உயர்நீதிமன்றக் கிளையை அணுகியது. அங்கு, போலீஸார் அனுமதி வழங்க வேண்டும் என உத்தரவிட்டதைத் தொடர்ந்து அதிமுகவின் போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.