நக்ஸல்களால் விஎச்பி தலைவர் கொலை-ஒரிஸ்ஸாவில் பந்த்
புவனேஸ்வர்: ஒரிஸ்ஸா மாநிலத்தில் உள்ள ஆஸ்ரமத்தில் நக்ஸலைட்டுகள் திடீர் தாக்குதல் நடத்தியதில் விஸ்வ இந்து பரிஷத் தலைவர் உள்பட ஆறு பேர் கொல்லப்பட்டனர். இதைக் கண்டித்து ஒரிஸ்ஸாவில் இன்று பந்த் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
ஒரிஸ்ஸா மாநிலம் கந்த்மால் மாவட்டத்தில் உள்ளது துமுடிபந்த் ஆஸ்ரமம். நேற்று முன்தினம் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு அங்கு சிறப்பு வழிபாடு நடந்தது. இதற்காக இரவு சமய சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் விஷ்வ இந்து பரிஷத் தலைவர்கள் சிலர் கலந்து கொண்டு சொற்பொழிவாற்றினர்.
பெண்கள், குழந்தைகள் என்று ஏராளமானோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அப்போது ஆயுதங்களுடன் அங்கு வந்த 50க்கும் மேற்பட்ட நக்ஸலைட்டுகள் திடீரென்று கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதில் விஎச்பி தலைவர் லக்ஷ்மானந்தா சரஸ்வதி (85), விஎச்பி அனைப்பினர் உள்பட 6 பேர் பரிதாபமாக இறந்தனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது.
லக்ஷ்மானந்தா கொல்லப்பட்டதை கண்டித்து விஎச்பியினர் சாலை மற்றும் ரயில் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவத்தை கண்டித்து இன்று ஒரிஸ்ஸாவில் பந்த்துக்கு இந்து அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன. இந்த பந்துக்கு நல்ல ஆதரவு கிடைத்துள்ளது. இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications