கண்ணை தோண்டி எடுத்து நேர்த்திக் கடன்!
கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டத்தில் உள்ளது அடகா கிராமம். இந்த கிராமத்தில் சங்கராஜா சுவாமிகள் மடம் உள்ளது.
அதே கிராமத்தைச் சேர்ந்தவர் முதுகப்பா எல்லப்பா கரடி (55). சங்கராஜா மடத்திற்கு அடிக்கடி சென்று வருவார். இந்நிலையில் நேற்று இவரது கனவில் தோன்றிய சங்கராஜா சுவாமி, ஒரு கண்ணை தனக்கு செலுத்தும்படி கேட்டாராம். இதையடுத்து நள்ளிரவில் மடத்திற்கு விரைந்தார் முதுகப்பா.
தனது வலது கண்ணை கட்டை விரலால் தோண்டி எடுத்து வைத்து சாமி கும்பிட்டார். கண்ணில் இருந்து ரத்தம் பெருக்கெடுத்தது. வலி தாங்காமல் அழுதார்.
பொழுது விடிந்தபோது, ஒரு கண்ணில் ரத்தமும், மறு கண்ணில் கண்ணீரும் வழிய முதுகப்பா மடத்தில் உட்கார்ந்திருப்பதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் தோண்டி எடுத்த கண் மடத்தில் கிடந்தது. எறும்புகள் மொய்த்து கொண்டிருந்த அந்தக் கண்ணை இன்னும் அப்புறப்படுத்தப்படவில்லை.