சென்னை-திருப்பதி மையத்திற்கு மாதம் 30,000 லட்டு
சென்னை: சென்னையில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான தகவல் மையத்தில் அடுத்த மாதம் முதல் 30,000 லட்டுக்கள் வினியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு விற்பதற்காக இந்த லட்டுக்கள் வினியோகிக்கப்படவுள்ளன. இதுகுறித்து தேவஸ்தான ஆலோசனைக் கமிட்டி தலைவர் அனந்த குமார் ரெட்டி செய்தியாளர்களிடம் கூறுகையில்,
இங்கு ஒரு லட்டு ரூ. 25க்கு விற்கப்படும். மாதந்தோறும் முதல் ஞாயிற்றுக்கிழமை 15,000 லட்டுக்களும், 3வது சனிக்கிழமை 15,000 லட்டுக்களும் சென்னை மையத்திற்கு அனுப்பப்படும்.
தற்போது முதல் ஞாயிற்றுக்கிழமையன்று 10,000 லட்டுக்கள் விற்கப்பட்டு வருகின்றன. ஆனால் வேகமாக லட்டுக்கள் விற்பனை ஆவதால் பக்தர்கள் ஏமாற்றமடைகின்றனர். இதைத் தவிர்க்க லட்டுக்களின் எண்ணிக்கை கூடுதலாக்கப்பட்டுள்ளது.
சென்னை தகவல் மையத்திற்கு லட்டுக்களின் எண்ணிக்கையை கூடுதலாக்குவதற்கு திருமலை திருப்பதி தேவஸ்தான செயற்குழு ஒப்புதல் அளித்துள்ளது.
இதுதவிர தமிழ் மாதமான புரட்டாசி மாதம் வரும் செப்டம்பர் 17ம் தேதி முதல் அக்டோபர் 16ம் தேதி வரை அனைத்து சனிக்கிழமைகளிலும் 15,000 முதல் 20,000 லட்டுக்கள் வரை விற்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications