சென்னை நகர 2வது மாஸ்டர் பிளானுக்கு அரசு ஒப்புதல்
சென்னை: சென்னை மாநகருக்கான 2வது மாஸ்டர் பிளானுக்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கியது. இதையடுத்து புறநர்ப் பகுதிகளில் அடுக்கு மாடிக் குடியிருப்பு கட்ட தடை நீங்கியுள்ளது.
சென்னையின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு சென்னை பெருநகரத்தின் முதல் மாஸ்டர் பிளான் 1974ல் சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் உருவாக்கியது. இதையடுத்து 2026ம் ஆண்டு காலத்தில்சென்னையின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு 2வது வரைவு மாஸ்டர் பிளானை சிஎம்டிஏ கடந்த ஆண்டு தயாரித்தது.
அதில் கட்டடம் கட்டுவதற்கான பல்வேறு விதிகள் தளர்த்தப்பட்டிருந்தன. வேறு பல முக்கிய திட்டங்களும் அதில் இடம் பெற்றிருந்தது.
கடந்த ஓராண்டாக அனுமதிக்காக காத்திருந்த இந்த மாஸ்டர் பிளானுக்கு நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முதல்வர் ஒப்புதல் அளித்தார். இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:
சென்னை மாநகரினை மக்கள் வசிப்பதற்கு மிகவும் ஏற்ற பெருநகரமாகவும் பொருளாதாரத்தில் வலுவானதாகவும் தூய்மையான சுற்றுப்புறச் சூழல் நிறைந்ததாகவும் வருங்கால தலைமுறையினருக்கு நல்லதொரு சொத்தாகவும் உருவாக்கிட வேண்டும் என்ற நோக்கத்தில் வரையப்பட்டுள்ள சென்னை மாநகரின் இரண்டாம் முழுமைத் திட்டம் அனைத்து தரப்பினருக்கும் நல்ல பயன் அளித்திடும் என்பதால் அதற்கு ஒப்புதல் அளிப்பதென்று முடிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
மாஸ்டர் பிளானுக்கு ஒப்புதல் கிடைத்திருப்பதன் மூலம் பல நல்ல திட்டங்கள் நிறைவேறும். கட்டடம் கட்டுவதற்கு பல சலுகைகள் கிடைக்கும். மாநகராட்சிக்கு அப்பால் உள்ள இடங்களில் தரைத்தளம் மற்றும் 3 அடுக்குகளுக்கு மேல் கட்டடம் கட்ட இருந்த தடைகள் நீங்கும்.
சென்னைக்கு வெளியே புதிய தொழில் நகரம் அமையவும் வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications