போலீஸாருக்கு 'வைத்தியம்' பார்க்கும் எஸ்பி!
ராமநாதபுரம்: உடல் நல பாதிப்பு என்று விடுப்பு எடுக்கும் போலீஸாருக்கு மருத்துவ பரிசோதனை செய்கிறார் ராமதநாதபுரம் எஸ்பி. இதனால் உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக போலீஸார் பொய் சொல்ல அஞ்சி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில், ராம்நாடு, பரமக்குடி, கீழக்கரை, ராமேஸ்வரம், திருவாடனை, கமுதி என 6 டிஎஸ்பி அலுவலகங்களும், ஒரு ஏஎஸ்பி அலுவலகமும் இயங்கி வருகின்றன. அதே போல் ராமநாதபுரம் மாவட்டத்தில் 2000 போலீசார் பணியில் உள்ளனர்.
இவர்கள் விடுப்பு எடுக்க வேண்டும் என்றால் உடல்நல பாதிப்பு என்று கூறுவதை தவிர்த்து வருகின்றனர். காரணம் அம்மாவட்ட எஸ்பி செந்தில் வேலன். இவர் எம்பிபிஎஸ் படித்து பட்டம் பெற்ற டாக்டர். காவல்துறையை விரும்பி காக்கிக்கு மாறிய வெள்ளை கோட்.
எஸ்பி அலுவலகத்தில் பணி புரியும் போலீசாருக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டால் என்ன மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும் என்று இவரே கூறி மருத்துவமும் பார்த்து விடுகிறார். உடம்பு சரியில்லை என்று நீண்ட நாள் விடுமுறை வேண்டும் என கேட்கும் போலீஸாரை எஸ்பி செந்தில் வேலன் அழைத்து உடல் பரிசோதனை செய்கிறார்.
இதனால் உடல்நிலை காரணம் காட்டி விடுப்பு எடுக்க முடியாமல் போலீஸார் திணறி வருகின்றனர். இதனால் விடுப்பு எடுக்கும் போலீஸார் உடல்நலம் பாதிப்பு என்ற வார்த்தையை பயன்படுத்துவதில்லை. டாக்டர் போலீஸ் சூப்பர்.












Click it and Unblock the Notifications