8 முறை உலக சாம்பியன் கீத் சேத்தியை வென்ற பங்கஜ்!
பெங்களூர்: ஓஎன்ஜிசி ஐபிஎஸ்எப் உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், எட்டுமுறை உலக சாம்பியன் பட்டம் வென்ற கீத் சேத்தியை தோற்கடித்து சாதனை புரிந்துள்ளார் பெங்களூர் வீரர் பங்கஜ் அத்வானி.
வெள்ளிக்கிழமை காலை கர்நாடக மாநில பில்லியர்ஸ் சங்க அரங்கில் நடந்த இந்த ஆட்டத்தில் 150-90, 150-0, 150-24, 150-0, 86-150, 150-72, 150-12 ஆகிய புள்ளிக் கணக்கில் வென்றார் பங்கஜ்.
வியாழக்கிழமை நடந்த அரையிறுதி ஆட்டத்தில் ஆடியதை விட மிகச் சிறப்பாக இந்தப் போட்டியில் விளையாடினார் பங்கஜ்.
இதற்கு முன் எட்டு உலகக் கோப்பைகளை வென்றிருந்தாலும், கீத் சேத்தி இந்தப் போட்டியில் 23 வயதான பங்கஜை சமாளிக்க முடியாமல் மிகவும் தடுமாறிப் போனார்.
இன்த வெற்றிக்குப் பிறகு பேசிய பங்கஜ், ஒவ்வொரு ஆட்டமும் புதிய சவால்களைத் தருவதாகவும், ஒவ்வொரு நாளும் புதிய அது புதிய அனுபவமாக மாறுவதாகவும் கூறினார்.
போட்டி முடிவு குறித்து கீத் சேத்தி கூறுகையில், சர்வதேச போட்டிகளைச் சமாளிக்கும் அளவு திறமையுடன் இருப்பதாகவே நான் இன்னும் நம்புகிறேன். ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பில்லியட்ஸைச் சேர்த்திருப்பது என்னை மேலும் ஆர்வத்துடன் விளையாடத் தூண்டுகிறது. ஒலிம்பிக்கிலும் பில்லியர்ட்ஸ் இடம் பெறும் என நம்புகிறேன். பங்கஜ் வென்றதில் எனக்கு வருத்தம் இல்லை என்றார்.
ஹாட்ரிக் சாதனை:
பங்கஜ் உலக சாம்பியனாயிருப்பது இது 3வது முறையாகும். கடந்த 2005, 2007 ஆகிய ஆண்டுகளில் அவர் உலக சாம்பியன் பட்டத்தை வென்றார். 2006ம் ஆண்டு போட்டி நடக்கவில்லை. இதன் மூலம் தொடர்ந்து 3 முறை வென்று ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளார்.
பங்கஜ், இதுவரை இரண்டு ஆசிய பில்லியர்ட்ஸ் பட்டங்களையும், சர்வதேச போட்டிகளில் 5 பட்டங்களையும் வென்றுள்ளார். ஆசிய விளையாட்டில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
ஜனாதிபதி வாழ்த்து...:
சாம்பியன்பங்கஜ் அத்வானிக்கு, குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் உள்பட தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.