மீனவர்கள் மீது தாக்குதல்: பிரதமருக்கு கருணாநிதி அவசர கடிதம்
இதுதொடர்பாக இன்று பிரதமருக்கு முதல்வர் அனுப்பியுள்ள கடிதம்:
நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக் கரையில் சேது சமுத்திர திட்டக் கால்வாய் பகுதிக்கு அருகே கடந்த 4ந் தேதி இலங்கை கடற்படை மீண்டும் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது.
இதில் ஒரு மீனவர் காயமடைந்து தஞ்சாவூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எல்லையைத் தாண்டி இந்திய கடற்பகுதிக்குள் நுழைந்து மீன் பிடிக்கும் இலங்கை மீனவர்களை கையாளும் விவகாரத்தில் இந்திய கடலோர காவல்படையும், இந்திய கடற்படையும் கடைபிடிக்கும் நல்லெண்ண வழிமுறைகளை இலங்கை கடற்படை கடைபிடிப்பது இல்லை என்பதை சொல்லத் தேவையில்லை.
இந்திய மீனவர்கள் மீது, எந்தவித எச்சரிக்கையும் வழங்காமல், இலங்கை கடற்படை தொடர்ந்து கண்மூடித் தனமாக துப்பாக்கிச்சூடு நடத்துவதால் மீனவர்களுக்கு காயங் களும், உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. இலங்கை கடற்படையின் இந்த நடவடிக்கை கடற்பகுதி குறித்த சர்வதேச விதிமுறைகளுக்கு எதிரானதாகும்.
இலங்கை கடற்படையின் இந்த தொடர் தாக்குதலால் தமிழக மீனவர்கள் பய உணர்வுடனேயே மீன் பிடிக்கச் செல்கின்றனர். துப்பாக்கிச் சூடு நடக்கும்போதெல்லாம் அதற்கு தாங்கள் பொறுப்பல்ல என்று இலங்கை கடற்படை மறுப்பு தெரிவிப்பது வழக்கமாகி விட்டது.
2006ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இன்று வரை 27 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளது.இதில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 24 பேர் காயமடைந்துள்ளனர்.
துப்பாக்கிச் சூடு தாக்குதலில் சிக்கிய அனைத்து மீனவர்களுமே அப்பாவிகள். அதேபோல 342 இந்திய மீனவர்களையும் இலங்கை கடற்படை பிடித்துச் சென்றுள்ளது.
எனவே இந்த பிரச்சனையை இலங்கை அரசாங்கத்திடம் எடுத்துச் சென்று இலங்கை கடற்படை அப்பாவி இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்துவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கருணாநிதி அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை இதற்கு முன்பு நடத்திய தாக்குதல்கள் தொடர்பாக ஏற்கனவே எழுதப்பட்ட கடிதங்களையும் முதல்வர் கருணாநிதி தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற சார்க் உச்சி மாநாட்டில் மீனவர்கள் மீதான தாக்குதல் பிரச்சனையை இலங்கை அரசிடம் பிரதமர் எழுப்பியதையும் எடுத்துரைத்துள்ள கருணாநிதி, உச்சி மாநாடு முடிந்ததுமே கடந்த 9.8.2008ந் தேதியன்று நாகப்பட்டினம் மீனவர்கள் 10 பேர் கைது செய்யப்பட்டதையும் நினைவுகூர்ந்துள்ளார்.
பாம்பன் மீனவர்கள் உண்ணாவிரதம்:
இதற்கிடையே, இரால் கொள்முதல் விலையை உயர்த்த கோரி பாம்பன் மீனவர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டுள்ளனர்.
தனியார் நிறுவனங்கள் மூலம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இரால் மீன்களின் விலைகளை உயர்த்த வேண்டும் என்று பாம்பன் மீனவர்கள் நீண்டகாலமாக கோரி வருகின்றனர்.
இதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் கோரிக்கை நிறைவேற்ற வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் பாம்பன் மீனவர்கள் இறங்கியுள்ளனர்.