போலி தங்க காசு விற்று பல லட்சம் மோசடி
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் போலி தங்க காசு கொடுத்து பல லட்ச ரூபாய் மோசடி செய்த கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.
திருச்சி மாவட்டத்தை சேர்ந்த ஒரு மோசடி கும்பல் சில தினங்களுக்கு முன் திருச்செந்தூருக்கு வந்தது. தூத்துக்குடி மாவட்டம் சோனகன்விளை, கூரத்தான்விளை, நாலுமாவடி உள்பட பல கிராமங்களுக்கு தங்க காசுகளை குறைந்த விலைக்கு விற்பதாக கூறியுள்ளனர்.
திருச்சி சமயபுரத்தை சேர்ந்தவர்கள் என்றும் முன்னோர்கள் சேமித்து வைத்திருந்த பொற்காசுகள் எங்களிடம் நிறைய உள்ளது. பணக்கஷ்டம் காரணமாக அதை குறைந்த விலைக்கு விற்பதற்காக இங்கு வந்தோம் என்றும் அந்த கும்பல் உருக்கமாக பேசியுள்ளது.
இதை நம்பிய சிலர் அவர்களிடம் இருந்து தங்க காசுகளை வாங்கியுள்ளனர். ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தங்கக் காசுகளை வெறும் 500 ரூபாய்க்கு தருவதாக அந்த கும்பல் கூறியதால் அப்பகுதி மக்கள் போட்டிப் போட்டுக் கொண்டு தங்க காசுகளை வாங்கினர். சோதனை செய்தபோது அது உண்மையான தங்கம்தான் என்றும் தெரிய தெரிந்தது.
இதைத் தொடர்ந்து அந்த கும்பல் மீண்டும் தங்ககாசுகளுடன் அந்த கிராமங்களுக்கு சென்றது. உண்மையான தங்கம், குறைந்த விலையில் கிடைக்கிறது என்று அப்பகுதி மக்கள் கடன் வாங்கி தங்க காசுகளை வாங்கியுள்ளனர். தங்கக் காசுகளை விற்றுவிட்டு அந்த கும்பல் உடனே சென்று விட்டது.
மறுநாள் அந்த தங்க காசுகளை சிலர் சோதித்து பார்த்தனர். அப்போது அவை தங்க மூலம் பூசப்பட்ட பித்தளை காசுகள் என தெரிய வந்தது. முதலில் உண்மையான தங்க காசுகளை கொடுத்து நம்ப வைத்து பின்னர் போலி காசுகளை கொடுத்து ஏமாற்றியதும் தெரிய வந்தது.
திருச்செந்தூர் பகுதியில் மட்டும் 450க்கும் மேற்பட்ட போலி தங்க காசுகளை கொடுத்து பல லட்ச ரூபாய் மோசடி செய்திருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து மாவட்ட எஸ்பியின் உத்தரவின் பேரில், தனிப்படை அமைக்கப்பட்டு மோசடிக் கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.