சிபிசிஐடி போலீஸார் தேடப்பட்ட எஸ்ஐ, ஏட்டு கோர்ட்டில் சரண்
நெல்லை: போதை பொருள் கடத்தியதாக பொய் வழக்கு பதிவு செய்த வழக்கில் சிபிசிஐடி போலீஸாரால் தேடப்பட்டு வந்த எஸ்ஐ, ஏட்டு ஆகியோர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
தூத்துக்குடியை சேர்ந்த தொழிலதிபர் ஜான்பால் என்ற மன்னன். இவர் போலி பத்திரங்கள் மூலம் வங்கியில் சுமார் 1 கோடி ருபாய் வரை கடன் வாங்கி மோசடி செய்தார். இதுகுறித்து வங்கி மேலாளர் தூத்துக்குடி குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார்.
ஜான்பால் தன்னுடைய உதவியாளர் ஈஸ்வரமூர்த்தியிடம் தனக்கு பதிலாக குற்றத்தை ஒப்புக் கொள்ளுமாறு கூறினார். இதற்கு அவர் மறுக்கவே அவரை போதை பொருள் கடத்தல் வழக்கில் திட்டமிட்டு சிக்க வைத்தார்.
இதுகுறித்து மேல்விசாரணை நடத்திய போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் ஈஸ்வரமூர்த்தி மீது பொய் வழக்கு போட்டுள்ளதாக அறிக்கை தாக்கல் செய்தனர்.
இதையடுத்து நெல்லை சிபிசிஐடி போலீசார் இதில் தொடர்புடைய ஜான்பால், வக்கீல் முத்துகுமார், பாபு, ரவுடி நல்லகனி, போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் காந்தி, எஸ்ஐ ராஜமாணிக்கம் என்ற ராஜ்குமார், ஏட்டு லுயிஸ் செல்வராஜ் ஆகியோர் மீது வழக்கு தொடர்ந்தனர்.
இதையடுத்து போலீஸார் மூவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். ஜான்பால், நல்லகனி, பாபு, இன்ஸ்பெக்டர் காந்தி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ராஜமாணிக்கம், லூயிஸ் செல்வராஜ், வக்கீல் முத்துகுமார் ஆகியோர் கடந்த 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்தனர்.
இவர்களை பிடிக்க சிபிசிஐடி போலீஸார் பல இடங்களில் தேடுதல் வேட்டை நடத்தினர். இந்த நிலையில் ராஜ்குமார், லூயிஸ் செல்வராஜ் ஆகியோர் சென்னை நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.