சிபிஐ கட்சி உறுப்பினர்கள்: புதுசு 1.28 லட்சம் - நழுவியது 75,000
டெல்லி: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் 1.28 லட்சம் புதிய உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர். தமிழ்நாடு மற்றும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் இதில் அதிகம் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது. அதேசமயம், 75 ஆயிரம் பேர் கட்சியை விட்டு விலகியுள்ளனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய உறுப்பினர்களாக 1,28,546 பேர் சேர்ந்துள்ளனர். இதில் 70 சதவீதம் பேர் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, பீகார் மற்றும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்களாவர். அதே சமயம் பழைய உறுப்பினர்கள் சுமார் 75,097 பேர் தங்களது பதிவை புதுப்பித்துக் கொள்ளவில்லை. இது அக்கட்சிக்கு இழப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் தேசிய செயலாளர் சுதாகர் ரெட்டி கூறுகையில்,
1.28 லட்சம் பேர் புதிதாக இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் வட மாநிலங்களில் இணைந்துள்ள உறுப்பினர்கள் போதுமானதாக இல்லை. கட்சியின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 6,53,462ஆக உயர்ந்துள்ளது.
இளைஞர்கள், பெண்கள், தலித்துகள், சிறுபான்மையினர் மற்றும் மலைவாழ் மக்கள் அதிகளவில் கட்சியில் இணைந்துள்ளனர். இந்தாண்டு மட்டும் 3,521 கிளைகள் அமைக்கப்பட்டு, கட்சி வளர்ச்சிப் பணி நடந்து வருகிறது.
பதிவு செய்யாத உறுப்பினர்கள், வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்து, அதனால் புதுப்பிக்க முடியாமல் போயிருக்கலாம். பழைய உறுப்பினர்களை தலைவர்கள் சந்திக்காமல் இருப்பது, கட்சியின் முக்கிய நிர்வாகிகள் இடம் பெயருவதால் அந்த பகுதியில் உறுப்பினர்கள் புதுப்பிக்க முடியாமல் போவது போன்ற காரணங்களும் உள்ளன என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications