படகு கவிழ்ந்து ஒருவர் பலி-இருவர் மாயம்
ஈரோடு: ஈரோடு மற்றும் தூத்துக்குடியில் படகு மற்றும் பரிசல் கவிழ்ந்து ஒருவர் இறந்தார். நீரில் மூழ்கிய இருவரை காணவில்லை.
ஈரோடு மாவட்டம் பாசூர்-நாமக்கல் மாவட்டம் சோழசிராமணி இடையே உள்ள காவிரி ஆற்றை கடந்து செல்ல பொதுமக்கள் பரிசல் போக்குவரத்தை பயன்படுத்தி வருகின்றனர். நேற்று சோழசிராமணியில் சந்தை நடந்தது. இதனால் இரு கரையிலும் பரிசல் துறைகளில் கூட்டம் அதிகம் இருந்தது.
சோழசிராமணியில் இருந்து சுமார் 15 பேர் பரிசலில் ஏறினர். மேலும் பைக்குகள், சைக்கிளும் பரிசலில் ஏற்றப்பட்டது. செங்கப்பன் என்பவர் பரிசலை ஓட்டினார். ஆற்றின் நடுவே சென்று கொண்டிருந்துபோது பலத்த காற்று வீசியது. அப்போது பரிசல்காரர் செங்கப்பன் துடுப்பை தண்ணீரில் தவறவிட்டார்.
இதனால் கட்டுப்பாட்டை இழந்த பரிசல் ஆற்று வெள்ளத்தின் போக்கில் சென்றது. அந்த பகுதியில் மின்நிலையம் அமைப்பதற்காக தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது. இநத தடுப்பணையில் மோதி பரிசல் கவிழ்ந்துவிடும் என்று அனைவரும் பயந்தனர்.
இதையடுத்து ஒவ்வொருவராக ஆற்றில் குதிக்க ஆரம்பித்தனர். இதில் சோழசிராமணியைச் சேர்ந்த சோமசுந்தரம் (55) தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சின்னத்தம்பியை (65) வெள்ளம் இழுத்துச் சென்றனது.
மற்ற 13 பேர் நீந்தி பத்திரமாக கரையேறினர். இதற்கிடையில் பரிசல்காரர் செங்கப்பன், கையேலே துடுப்புப் போட்டு பரிசலை கரை சேர்த்தார். பரிசலில் இருந்து சிறுமி சவுமியா (7), வாகனங்களும் பத்திரமாக கரை சேர்த்துவிட்டு செங்கப்பன் தப்பியோடினார்.
வெகுநேரம் தேடியும் சின்னத்தம்பி கிடைக்காததால் அவர் இறந்திருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. கடந்த 31 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பரிசல் விபத்தில் 17 பேர் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடியிலும்....
அதேப்போல தூத்துக்குடியில், கடலுக்கு சென்ற மீனவர்கள், படகு கவிழ்ந்தது. இதில் ஒருவரை காணவில்லை. அவர் இறந்திருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
தூத்துக்குடி திரேஸ்புரத்தைச் சேர்ந்தவர் அருள்சாமி. இவருக்குச் சொந்தமான நாட்டுப் படகில் நிக்கோலஸ், ரூபி சன், இசக்கிராஜன் ஆகியோர் நேற்று முன்தினம் அதிகாலையில் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர்.
கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, திடீரென பயங்கர வேகத்தில் காற்று வீசியது. இதில் நிலைதடுமாறிய படகு கவிழ்ந்தது. இதில் மீனவர்கள் மூன்று பேரும் கடலில் மூழ்கினர். இதில் ரூபிசன், இசக்கிராஜணன் ஆகிய இருவர் மட்டும் நீந்தி வான்தீவில் கரையை அடைந்தனர்.
நிக்கோலஸ் மட்டும் என்ன ஆனார் என்பது தெரியவில்லை. கடலோர காவல்படையினர் நிக்காலஸ்சை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications