தமிழகத்தில் மின் உற்பத்தி அதிகரிப்பால் மின்வெட்டுக்கு 'வெட்டு'!
சென்னை: தமிழகத்தின் மின் உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால் தமிழகத்தின் எந்தப் பகுதியிலும் மின் வெட்டு அமல்படுத்தப்படவில்லை என்று தமிழ்நாடு மின்சார வாரிய தலைவர் மச்சேந்திரநாதன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நிலவி வரும் மின் தட்டுப்பாடு காரணமாக ஷிப்ட் முறையில் மின் வெட்டு அமல்படுத்தப்பட்டு வந்தது. இதனால் தொழிற்சாலைகள், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் அவதிப்பட்டு வந்தனர்.
இந்த நிலையில், தற்போது மழை பெய்து வருவதால், மின் உற்பத்தி அதிகரித்துள்ளதாக மின்வாரியத் தலைவர் மச்சேந்திர நாதன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், கடந்த 3 நாட்களாக காற்றாலை மின்சாரம் கூடுதலாக வருகிறது. நேற்று மட்டும் 1800 முதல் 1900 மெகாவாட் வரை காற்றாலை மின்சாரம் கிடைத்தது.
மேலும் தமிழகத்தின் பல பகுதிகளிலும் நல்லமழை பெய்து வருவதால், மின்சாரத் தேவை குறைந்துள்ளது. இதனால் தமிழகத்தின் எந்தப் பகுதியிலும் நேற்று மின்வெட்டு அமல்படுத்தப்படவில்லை.
கல்பாக்கத்திலிருந்தும் கூடுதலாக மின்சாரம் கிடைக்கிறது. அங்கு சில நாட்களுக்கு முன்பு 63 மெகாவாட் மின்சாரமே கிடைத்தது. தற்போது அது 160 மெகாவாட்டாக உயர்ந்துள்ளது.
நெய்வேலியிலிருந்து 500 மெகாவாட் மின்சாரம் தருவதாக தெரிவித்துள்ளனர்.
எனவே மழையும், காற்றும் தொடர்ந்தால், மின் தட்டுப்பாடு பூரணமாக நீங்கும். எனவே மின் பற்றாக்குறையை வெற்றிகரமாக சமாளிக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications