அணு ஒப்பந்தம்: பிரதமரின் மெகா மக்கள் மோசடி - பாஜக

பெங்களூரில் நடந்து வரும் தேசிய செயற்குழுக் கூட்டத்தில், இன்று முக்கிய அரசியல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கொண்டு வந்தார்.
இத்தீர்மானம் குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொதுச் செயலாளர் அனந்தகுமார் கூறுகையில், அணு சக்தி சோதனை தொடர்பாக மக்களையும், நாடாளுமன்றத்தையும், அரசியல் கட்சிகளையும் ஏமாற்றி திசை திருப்பும் வகையில் நடந்து கொண்டுள்ளார் பிரதமர் மன்மோகன் சிங்.
தடங்கலற்ற எரிபொருள் சப்ளை முதல் தொழில்நுட்ப உதவிகள் வரை பிரதமர் தொடர்ந்து தவறான தகவல்களையே நாட்டுக்கு தந்து கொண்டுள்ளார்.
இந்தியாவில் உள்ள அணு சக்தி நிலைகளை அமெரிக்கா பார்வையிட இந்தியா அனுமதிக்காது என்று நாடாளுமன்றத்தில் பிரதமர் உறுதியளித்தார். ஆனால் 123 ஒப்பந்தத்தில் உள்ள ஒரு அம்சம் மூலம் சர்வதேச அணு சக்தி ஏஜென்சி இந்திய அணு உலைகளைப் பார்வையிட வழி செய்யப்பட்டுள்ளது.
சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளின் நெருக்கடி மற்றும் பிற காரணங்களால் எதிர்காலத்தில் எரிபொருள் சப்ளையை அமெரிக்கா நிறுத்தினால், அதைப் பின்பற்றி பிற என்.எஸ்.ஜி. நாடுகளும் அதே செயலை செய்யும்.
123 ஒப்பந்தத்தின் கீழ் இந்திய அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் கூட ஹைட் சட்டத்தின் அம்சங்களுக்கு இது கட்டுப்படும் என அமெரிக்கா தொடர்ந்து கூறி வருகிறது. இதற்கு பிரதமரிடமிருந்து விளக்கம் இல்ைல.
தற்போதைய நான்கரை ஆண்டு கால ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இந்தியா பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக பாஜக கருதுகிறது.
இந்தியாவின் அணு சோதனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலான இந்த ஒப்பந்தத்ைத பாஜகாவால் ஏற்கவே முடியாது.
ராமர் கோவில்..
ராமர் கோவில் விவகாரம் இன்னும் முக்கியப் பிரச்சினையாகவே உள்ளது. அந்த லட்சியத்தை அடையும் வரை பாஜக ஓயாது.
அமர்நாத் மற்றும் ராமர் பால விவகாரம் தற்போதைய பிரச்சினைகளாக இருக்கும்போதிலும், முக்கிய பிரச்சினையாக அயோத்தி ராமர்கோவில் உள்ளது. அதேபோல பொது சிவில் சட்டப் பிரச்சினையும் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இவை தீரும் வரை பாஜக ஓயாது.
அயோத்திப் பிரச்சினைக்கு சட்டப்பூர்வமாகவோ அல்லது ஒருமித்த கருத்தின் அடிப்படையிலோ தீர்வு காணப்பட வேண்டும் என பாஜக விரும்புகிறது. எனவே அயோத்தி பிரச்சினையை பின்னுக்குத் தள்ளுவது என்ற பேச்சுக்கே இடமில்லை.
அமர்நாத் நில விவகாரம்...
பிரிவினைவாத சக்திகளுக்கு பணிந்து போகும் போக்கை மாற்றியிருக்கிறது அமர்நாத் நில விவகாரம். காஷ்மீரின் ஒரு பகுதியை விட்டுக் கொடுக்க வேண்டும் என்ற பிதற்றலான போக்கை சில அறிவுஜீவிகள் கடைப்பிடித்து வருகின்றனர். இந்தியாவின் எந்தப் பகுதியையும் பிரித்துக் கொடுக்கவோ, விட்டுக் கொடுக்கவோ பாஜக அனுமதிக்காது.
காஷ்மீர் குறித்த நேருவின் கொள்கை மிகப் பெரிய வரலாற்றுப் பிழை. நேருவின் காஷ்மீர் கொள்கைக்கு முற்றிலும் முரணாக, காஷ்மீருக்கு வெளியே இருந்து வரும் தீவிரவாதம் இன்று காஷ்மீரை ரத்தக்களறியாக்கி வைத்துள்ளது.
காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து இன்று மக்கள் கிட்டத்தட்ட வெளியேற்றப்பட்டு விட்டனர். வழிபாட்டுத் தலங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டு விட்டன. பக்தர்களுக்கு தரப்பட வேண்டிய அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை.
ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. இதை பிரிவினைவாதிகளும், எல்லைக்கு அப்பாலிருந்து அவர்களுக்கு உதவுவோரும் புரிந்து கொள்ள வேண்டும். இப்படிப்பட்டவர்களை கடுமையாக கையாள வேண்டும் என்று அரசியல்தீர்மானத்தில் கூறப்பட்டிருப்பதாக அனந்தகுமார் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications