சிறப்பாக செயல்படும் தமிழ்நாடு போலீஸ் - கருணாநிதி பாராட்டு
சென்னை: தமிழக காவல்துறையினரின் அரும்பணி மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்களது சீரிய பணி சமுதாயத்திற்கும், நாட்டின் பாதுகாப்புக்காகவும் தொடர வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
போலீஸார், தீயணைப்பு படை உள்ளிட்ட சீருடை பணித் துறையினருக்கு ஜனாதிபதி, முதல்வர் விருதுகள் வழங்கும் விழா சென்னையில் நடந்தது. முதல்வர் கருணாநிதி விருதுகளை வழங்கி பேசியதாவது:
சட்டம் ஒழுங்கை காப்பாற்றும் அரும்பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் பணியில் மகிழ்ச்சி அடைகிறேன். அவர்களின் பணியை ஊக்கப்படுத்தவே இந்த விருதுகள்.
ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் காவல்துறை அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை அனைவரிடமும் எனக்கு பற்றும் பாசமும் என்றும் உண்டு.
அதனால்தான் உங்களின் குறைகளையும் தேவைகளையும் கேட்டறிய நாட்டிலேயே காவல்துறையினரின் நலனுக்காக முதல் முறையாக தமிழகத்தில் போலீஸ் கமிஷனை அமைத்தது திமுக ஆட்சிதான்.
தற்போது 3வது போலீஸ் கமிஷன் அமைக்கப்பட்டு, அக்குழுவின் பரிந்துரைகளை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த பரிந்துரைகளை ஏற்று நடவடிக்கை எடுத்தால், அது வருங்காலத்தில் போலீஸார் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் வாழ்க்கை தரம் மேம்பட மிகவும் பயனுள்ளதாக அமையும் என்பதை நான் நன்கு அறிவேன்.
ஆட்சி பொறுப்பேற்ற இந்த இரண்டாண்டுகளில், தமிழகத்தில் 2,188 எஸ்ஐகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் முதல்கட்டமாக 625 ஆண் எஸ்ஐகளுக்கும் 118 பெண் எஸ்ஐகளுக்கும் இதுவரை பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு ஊனமாஞ்சேரி காவல் உயர் பயிற்சியகத்தில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
போலீஸாருக்கு விருது மற்றும் போதிய பயிற்சி அளித்து உற்சாகப்படுத்துவதன் மூலம் சட்டம் ஒழுங்கை பராமரிக்க முடியும். போலீஸாரின் பணி சமுதாயத்தின் நன்மைக்காகவும் நாட்டின் பாதுகாப்புக்காகவும் உங்களின் பணி தொடர வேண்டும் என்றார் முதல்வர்.












Click it and Unblock the Notifications