பெண் அதிகாரியிடம் செக்ஸ் சில்மிஷம்: ராணுவ மேஜர் டிஸ்மிஸ்
டெல்லி: தியானம் செய்ய கூப்பிட்டு பெண் அதிகாரியிடம் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்ட ராணுவ மேஜர், ராணுவ கோர்ட் விசாரணைக்குப் பின்னர் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார். ராணுவ மேஜர் ஒருவர் இப்படிப்பட்ட புகாரின் பேரில் டிஸ்மிஸ் ஆவது இதுவே முதல்முறையாகும்.
ராணுவத்தில் மேஜர் ஜெனரலாக இருந்தவர் ஏ.கே.லால். ஜம்மு காஷ்மீர் மாநிலம், லே பிராந்தியத்தில் பணியாற்றி வந்தார். அப்போது, அவர் மீது நேகா ரவத் என்ற ராணுவ பெண் அதிகாரி, செக்ஸ் புகார் கொடுத்தார்.
வீட்டுக்கு தியான வகுப்புக்கு அழைத்து, தன்னை மானபங்கப்படுத்தியதாக அவர் கூறினார். இதையடுத்து ராணுவ கோர்ட்டில் லெப்டினன்ட் ஜெனரல் ஆர்.எஸ்.சுஜாலனா முன்பு ஏ.கே.லால் மீது விசாரணை நடைபெற்றது.
மானபங்கப்படுத்துதல், சாட்சியாக இருந்த 2 அதிகாரிகளை தனக்கு ஆதரவாக திருப்ப முயற்சித்தல் உள்ளிட்ட 4 குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட்டன. விசாரணையில், 4 குற்றச்சாட்டுகளும் நிரூபணம் ஆயின.
இதையடுத்து ஏ.கே.லாலை டிஸ்மிஸ் செய்து ராணுவ கோர்ட்டு உத்தரவிட்டது. ராணுவ தலைமை தளபதி தீபக் கபூர் ஒப்புதல் கொடுத்த பின்னர் இந்த உத்தரவு அமலுக்கு வரும்.
இந்திய ராணுவ வரலாற்றிலேயே செக்ஸ் புகாரில் சிக்கி மேஜர் ஜெனரல் ஒருவர் பதவியிழப்பது இதுவே முதல் முறையாகும்.