டெல்லி குண்டுவெடிப்பு: குஜராத் போலீஸ் தகவலால் மேலும் 4 பேர் சிக்கினர்
டெல்லி: டெல்லி குண்டுவெடிப்பு தொடர்பாக, குஜராத் போலீஸார் கொடுத்த துப்பின் அடிப்படையில், ஹரியானா மாநிலம் பரீதாபாத்தில் நான்கு பேரை டெல்லி போலீஸார் பிடித்துள்ளனர். இவர்களுக்கும், டெல்லி குண்டுவெடிப்புக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. இவர்களிடம் போலீஸார் ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.
டெல்லி குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணையை டெல்லி போலீஸார் முடுக்கி விட்டுள்ளனர். இதுவரை 8 பேரை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் குஜராத் போலீஸார் முக்கியமான தகவலை டெல்லி போலீஸாருக்கு இன்று அளித்தனர்.
இதன் அடிப்படையில் டெல்லி அருகே உள்ள பரீதாபாத்துக்கு விரைந்த டெல்லி போலீஸார், அங்கு தங்கியிருந்த நான்கு பேரைப் பிடித்தனர். அவர்களுக்கு 20 முதல் 25 வயது வரையிருக்கும். நான்கு பேருக்கும் டெல்லி குண்டுவெடிப்பில் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்களில் 2 பேர் கடந்த ஆறு மாதங்களாக இங்கு தங்கியுள்ளனர். மற்ற இருவரும் ஒரு வாரத்திற்கு முன்புதான் வந்துள்ளனர்.
நான்கு பேரும் வாடகைக்கு இங்குதங்கியுள்ளனர். மற்ற இருவரும் தங்களது உறவினர்கள் என வீட்டு உரிமையாளரிடம் தெரிவித்துள்ளனர். 2 நாட்கள் மட்டுமே தங்களுடன் இருப்பார்கள் எனவும் தெரிவித்துள்ளனர் என்று தெரிவித்துள்ளனர்.
நான்கு பேரின் பெயர், விவரங்களை போலீஸார் வெளியிடவில்லை. தொடர்ந்து விசாரணை நடந்துவருகிறது.
இந்த நிலையில், நேற்று மாலை தெற்குடெல்லியில் உள்ள லாஜ்பத் நகரில் போலீஸாரின் தடுப்பையும் மீறி ஒரு சான்ட்ரோ கார் வேகமாக சென்றது. இதுகுறித்தும் விசாரணை நடந்து வருகிறது.
இந்தக் காரைப் பிடிக்க பல முனைகளிலும் தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, குண்டுவீச்சால் பாதிப்படைந்த கன்னாட் பிளேஸ் பகுதியில் உள்ள மார்க்கெட் இன்று திறக்கப்பட்டது. குண்டுவெடிப்பைத் தொடர்ந்து நேற்று முழுவதும் மார்க்கெட் மூடப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று மார்க்கெட் திறக்கப்பட்டு வழக்கம் போல செயல்படத் தொடங்கியது. மக்கள் வழக்கம் போல ஷாப்பிங்கில் ஈடுபட்டனர்.
நேற்று கரோல்பாக் மற்றும் கிரேட்டர் கைலாஷ் மார்க்கெட்டுகள் திறக்கப்பட்டன என்பது நினைவிருக்கலாம்.
டெல்லியில் வெடிகுண்டு புரளி:
சனிக்கிழமை மாலை டெல்லியில் நடந்த தொடர் குண்டுவெடிப்புச் சம்பவத்தின் பீதி இன்னும் அகலவில்லை. இதுதொடர்பான விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், டெல்லியில் உள்ள அடுக்குமாடி கட்டிடம் ஒன்றில் குண்டுவைக்கப் பட்டிருப்பதாக விடுக்கப்பட்ட மிரட்டலை தொடர்ந்து பெரும் பதட்டம் நிலவியது.
பாராகம்பா சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மர்ம நபர் ஒருவர் போலீசுக்கு தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்துள்ளார்.
இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று தீவிர சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் தொலைபேசியில் விடுக்கப்பட்ட மிரட்டல் புரளி என்று தெரியவந்தது.